15 ஆண்டுகளாக பறவைகளின் 'காவலன்' தினமும் இருவேளை உணவளிக்கிறார்
15 ஆண்டுகளாக பறவைகளின் 'காவலன்' தினமும் இருவேளை உணவளிக்கிறார்
15 ஆண்டுகளாக பறவைகளின் 'காவலன்' தினமும் இருவேளை உணவளிக்கிறார்
ADDED : பிப் 23, 2024 10:56 PM

பாலக்காடு:கேரள மாநிலம், பாலக்காடு அருகே, கூட்டுறவு வங்கி இரவு காவலாளி ஒருவர், பறவைகளுக்கு தினமும் இருவேளை உணவு அளித்து வருகிறார்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கொல்லங்கோட்டை சேர்ந்தவர் கணேசன். இவர், அங்குள்ள கூட்டுறவு வங்கியில் தினக்கூலி அடிப்படையில் இரவு காவலாளியாக பணியாற்றுகிறார்.
இவர், கடந்த 15 ஆண்டுகளாக, புறாக்கள், பறவைகளுக்கு தினமும் இரண்டு வேளை தவறாமல் உணவளித்து வருகிறார். கொரோனா அச்சுறுத்தல் காலத்திலும் இவர் இதை தவறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, கணேசன் கூறியதாவது:
செல்லப் பிராணிகளுக்கு உணவு அளிப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும். கடந்த, 15 ஆண்டுகளாக புறாக்கள் உள்ளிட்ட, பறவைகளுக்கு உணவளித்து வருகிறேன்.
காலை, 6:00 மணிக்கு கொல்லங்கோடு அருகே உள்ள வளாகத்தின் மேற்கூரையில், என் வரவுக்காக பறவைகள் காத்திருக்கும். அரிசி, கோதுமை, சிறு பயிறு ஆகிவற்றை அவற்றுக்கு உணவாக அளிப்பேன். அந்த ஜீவன்களுக்கு உணவளிப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அதேபோன்று, மாலை, 5:00 மணிக்கும் உணவளித்து வருகிறேன்.
கோடை காலம் என்பதால், தொட்டி அமைத்து தண்ணீரும் அளித்து வருகிறேன். பறவைகளுக்கு உணவளிக்க தினமும் 5 கிலோ அரிசி தேவைப்படுகிறது. கிடைக்கும் வருமானத்தில் இதற்காக செலவிடுகிறேன். சமீப காலமாக, 500க்கும் மேற்பட்ட புறாக்கள் உணவு தேடி இங்கு வருகின்றன.
இவ்வாறு, அவர் கூறினார்.