Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிச்சூடு தாக்குதலில் ஐந்து போலீசார் படுகாயம்

மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிச்சூடு தாக்குதலில் ஐந்து போலீசார் படுகாயம்

மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிச்சூடு தாக்குதலில் ஐந்து போலீசார் படுகாயம்

மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிச்சூடு தாக்குதலில் ஐந்து போலீசார் படுகாயம்

ADDED : ஜன 03, 2024 01:10 AM


Google News
இம்பால், மணிப்பூரில் பாதுகாப்பு படையினருக்கும், மர்ம நபர்களுக்கும் இடையே நேற்று நடந்த துப்பாக்கிச் சண்டையில், நான்போலீசார் மற்றும் எல்லை பாதுகாப்பு படை வீரர் படுகாயம் அடைந்தனர்.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.

இங்கு, கூகி மற்றும் மெய்டி சமூகத்தினரிடையே இடஒதுக்கீடு தொடர்பாக பெரும் கலவரம் ஏற்பட்டு, ஏராளமானோர் பலியாகினர்.

4 பேர் பலி


இவ்விவகாரம் சற்று தணிந்திருந்த நிலையில், நேற்று முன்தினம் புத்தாண்டு தினத்தன்று மணிப்பூரில் தெங்னோபால் மாவட்டத்தின் மோரே நகரில் மர்ம நபர்கள், பொதுமக்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தலைமறைவாகினர்.

இச்சம்பவத்தில் அப்பகுதியைச் சேர்ந்த முஹமது தவுலத், 30, சிராஜுதின் , 50, முஹமது ஆசாத் கான், 40, முஹமது ஹுசைன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதில், இரண்டு பேர் கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை தொடர்ந்து தவுபால், இம்பால் மேற்கு மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு உத்தரவை மாநில அரசு பிறப்பித்தது.

இதற்கிடையே இத்தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறி சந்தேகத்தின்படி இரண்டு பேரை, சாவங்பாய் என்ற பகுதியில் இருந்து போலீசார் நேற்று விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது அங்குள்ள பெண்கள், போலீசாரை சுற்றி வளைத்து, அவர்களை விடுவிக்கும்படி கோஷமிட்டனர்.

அப்போது, அங்கு பதுங்கி இருந்த மர்ம நபர்கள், போலீசாரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து அவர்களை நோக்கி போலீசாரும் பதில் தாக்குதல் நடத்தினர்.

இதில் நான்கு போலீசாரும், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவரும் படுகாயம் அடைந்தனர். பாதிக்கப்பட்டவர்களை, ஹெலிகாப்டர் வாயிலாக இம்பால் மருத்துவமனைக்கு பாதுகாப்புப் படையினர் அனுப்பி வைத்தனர்.

எனினும், தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நீடித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நம் அண்டை நாடான மியான்மருக்கு அருகே மணிப்பூரின் மோரே நகரம் அமைந்து உள்ளது. இங்கு அந்நாட்டின் பயங்கரவாதிகள், நம் எல்லைக்குள் நுழைந்து அசம்பாவித சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக சந்தேகம் எழுந்துள்ளது.

முதல்வர் குற்றச்சாட்டு


இந்நிலையில் இம்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாதுகாப்புப் படையினரை அம்மாநில முதல்வர் பைரேன் சிங், நேற்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

மோரே நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் மியான்மரைச் சேர்ந்த வெளிநாட்டு கூலிப்படையினருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

அதிநவீன ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு நம் படையினர் பதிலடி தந்துள்ளனர்.

இச்சம்பவத்தைஅடுத்து, சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

நிலைமையை கட்டுப்படுத்த, கூடுதல் படையினரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்கும் வகையில், மத்திய அரசுடன் இணைந்து அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us