பாகல்கோட்டின் பாரம்பரிய வீட்டின் கதவு சட்டங்கள்
பாகல்கோட்டின் பாரம்பரிய வீட்டின் கதவு சட்டங்கள்
பாகல்கோட்டின் பாரம்பரிய வீட்டின் கதவு சட்டங்கள்
ADDED : பிப் 10, 2024 11:35 PM

நவீன உலகில் வீட்டை பாதுகாக்க, பல்வேறு தொழில்நுட்பங்களுடன் கூடிய கதவுகள் வைக்கப்படுகின்றன. பாகல்கோட்டில் பாரம்பரிய மற்றும் நவீன கலைகளுடன் கூடிய கதவு சட்டங்கள், வாடிக்கையாளர்களை பெரிதும் கவருகின்றன.
பாகல்கோட் மாவட்டம் பாதாமியில் பனசங்கரி அம்மன் கோவில் திருவிழா கடந்த வாரம் நடந்தது. திருவிழாவின் ஒரு பகுதியாக, ஹோலேலாலுாரில் கண்காட்சி நடந்தது.
கண்காட்சியில், மர வேலைபாடுகள் கொண்ட கதவு சட்டங்கள், பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. வீட்டின் முன் கதவு எப்படி இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு உதவும் வகையில் இங்கு கதவு சட்டங்கள் இடம் பெற்றிருந்தது.
மர சட்டங்கள் செய்யும் கலைஞரும், உரிமையாளருமான பஷீர் அகமது கூறியதாவது:
முன்னர் கிராமங்களை சேர்ந்தவர்கள் மட்டுமே கதவுகளை வாங்கி வந்தனர். தற்போது நகர்புற மக்களும், தங்கள் வீடுகளுக்கு இதுபோன்ற புதிய கதவு சட்டங்களை வாங்கி செல்கின்றனர்.
எங்கள் வீட்டின் 10 பேரும், ஆறு மாதங்களுக்கு முன்பே கதவு சட்டங்கள் தயாரிக்க துவங்கி விடுவோம். எங்கு கண்காட்சி நடந்தாலும், 80 முதல் 100 கதவுகளை விற்பனைக்கு கொண்டு செல்வோம். கிராமப்புற மக்கள் ஒன்பது அடி உயர கதவுகளை வாங்குகின்னறர். நகர்ப்புற மக்கள், ஏழு அடி உயர கதவுகளை வாங்குகின்றனர். மரக்கதவுகள் வாடிக்கையாளர்கள் தேவைப்படும் அளவுக்கு ஏற்றபடி 30,000 ரூபாய் முதல் 60,000 ரூபாய் வரை விற்பனை செய்கிறோம்.
கதவுகளில் செடி, சூரியன், சந்திரன், மயில், யானை, பறவை, நந்தி, விநாயகர், சிவன், சரஸ்வதி, லட்சுமி, வெங்கடேஸ்வரா, பசவண்ணர், அக்கமகாதேவி, சங்கொல்லி ராயண்ணா போன்றோரின் உருவங்கள் வடிவமைத்து தருகிறோம்.
சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்து நுாற்றுக்கணக்கான கலைஞர்கள் இத்தொழிலில் ஈடுபட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.