கலெக்டர்களுக்கு அமித் ஷா மிரட்டலா? காங்.,கிடம் விளக்கம் கேட்குது ஆணையம்!
கலெக்டர்களுக்கு அமித் ஷா மிரட்டலா? காங்.,கிடம் விளக்கம் கேட்குது ஆணையம்!
கலெக்டர்களுக்கு அமித் ஷா மிரட்டலா? காங்.,கிடம் விளக்கம் கேட்குது ஆணையம்!
ADDED : ஜூன் 03, 2024 04:32 AM

புதுடில்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கலெக்டர்களை மிரட்டியதாக காங்கிரஸ் பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் குற்றஞ்சாட்டிய நிலையில், அதுகுறித்த விபரங்களை உடனடியாக தரும்படி தேர்தல் கமிஷன் வலியுறுத்தியுள்ளது.
நாடு முழுதும் லோக்சபா தேர்தல் நடந்து முடிந்த நிலையில், தேர்தல் அதிகாரிகளாக பணியாற்றிய கலெக்டர்களை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மிரட்டியதாக காங்கிரசின் பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் குற்றஞ்சாட்டியிருந்தார்.
அவர் தன் சமூக வலைதள பதிவில், 'தேர்தல் அதிகாரிகளாகச் செயல்படும் கலெக்டர்கள் 15 பேரிடம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார். இது, அப்பட்டமான மிரட்டலாகும்' என கூறியிருந்தார்.
இந்நிலையில், இந்த புகார் தொடர்பான விபரங்களை உடனடியாக தரும்படி ஜெய்ராம் ரமேஷை தேர்தல் கமிஷன் கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக அவருக்கு அனுப்பிய கடிதத்தில் தேர்தல் கமிஷன் கூறியுள்ளதாவது:
தேர்தல் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் தங்கள் கடமையை புனிதமாகக் கருதி செய்து வருகின்றனர். இதுபோன்ற பொது அறிக்கைகள், அவர்கள் மீதான சந்தேகங்களை எழுப்புகின்றன. பொது நலன் கருதி இந்த விவகாரத்தில் முடிவெடுக்கப்பட வேண்டும்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் சூழலில், அனைத்து அதிகாரிகளும் தேர்தல் கமிஷனின் பிரதிநிதிகளாக செயல்பட்டு வருகின்றனர்.
எந்த விதிமீறலையும் அவர்கள் உடனுக்குடன் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், நீங்கள் கூறியது போல் எந்தவொரு செயலும் நடந்ததாக தகவல் ஏதும் இல்லை.
மத்திய உள்துறை அமைச்சர், 150 கலெக்டர்களிடம் பேசியுள்ளதற்கான ஆதாரங்கள் ஏதேனும் இருந்தால், அதை உடனடியாக தேர்தல் கமிஷனுக்கு தெரியப்படுத்துங்கள். புகார் உண்மையாக இருக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டது.