ஈஸ்வரப்பாவின் துப்பாக்கி சூடு பேச்சு வழக்கு பதிவு செய்ய காங்., அரசு திட்டம்
ஈஸ்வரப்பாவின் துப்பாக்கி சூடு பேச்சு வழக்கு பதிவு செய்ய காங்., அரசு திட்டம்
ஈஸ்வரப்பாவின் துப்பாக்கி சூடு பேச்சு வழக்கு பதிவு செய்ய காங்., அரசு திட்டம்
ADDED : பிப் 10, 2024 06:10 AM

பெங்களூரு: நாட்டை பிரிக்க வேண்டும் என கூறியவர்களை துப்பாக்கியால் சுட்டு கொல்ல வேண்டும்' எனக் கூறிய பா.ஜ., முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பாவை, காங்கிரஸ் கண்டித்துள்ளது.
தாவணகெரேவில், நேற்று முன்தினம் ஊடகத்தினர் சந்திப்பில் பேசிய ஈஸ்வரப்பா, 'காங்கிரஸ் எம்.பி., சுரேஷ், எம்.எல்.ஏ., வினய் குல்கர்னி தேச துரோகிகள்.
இவர்களை போன்று நாட்டை பிரிக்க வேண்டும் எனக் கூறுவோரை சுட்டு கொல்ல சட்டம் கொண்டு வரும்படி, பிரதமரிடம் வலியுறுத்துவேன்' என்றார். இதனால் காங்கிரஸ் கொதித்தெழுந்துள்ளது.
இது குறித்து, 'எக்ஸ்' வலைதலத்தில், காங்கிரஸ் நேற்று கூறியிருப்பதாவது:
காந்தியை சுட்டு கொன்ற கோட்சே சந்ததியினரான பா.ஜ., தலைவர்களின், பயங்கரவாத மனநிலை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. எம்.பி., சுரேஷை, எம்.எல்.ஏ., வினய் குல்கர்னியை, சுட்டு கொல்ல வேண்டும் என, கூறியதன் மூலம் ஈஸ்வரப்பா பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறார்.
சுட்டு கொல்ல வேண்டும் என, கூறிய ஈஸ்வரப்பா மீது, பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்யும்படி, உள்துறை அமைச்சரிடம் வேண்டுகோள் விடுப்போம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கூறி, நாட்டை பிரிப்பதாக கூறியவர்களை சுட்டு கொல்லும் சட்டத்தை, ஈஸ்வரப்பா கொண்டு வரட்டும்.
மத்திய அரசு சட்டத்தை அமல்படுத்தினால், மாநிலத்தில் அமல்படுத்த எந்த தடையும் இல்லை. இந்த சட்டம் நாட்டுக்கே பொருந்தும். அதை விட்டு விட்டு அவ்வப்போது பேசுவது சரியல்ல.
சுட்டு கொல்லும்படி கூறிய முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா மீது, யாராவது புகார் அளித்தால், வழக்கு பதிவு செய்வோம். சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.