ஹோட்டலில் ரூம் போட்டு கள்ள நோட்டு தயாரித்த தொழிலதிபர் மகன் கைது
ஹோட்டலில் ரூம் போட்டு கள்ள நோட்டு தயாரித்த தொழிலதிபர் மகன் கைது
ஹோட்டலில் ரூம் போட்டு கள்ள நோட்டு தயாரித்த தொழிலதிபர் மகன் கைது

பெங்களூரு : கர்நாடகாவில் பெற்றோருடன் சண்டை போட்டு, ஆடம்பர செலவுக்காக ஹோட்டலில் ரூம் போட்டு கள்ள நோட்டு தயாரித்த தொழிலதிபர் மகனை போலீசார் கைது செய்தனர்.
கர்நாடகாவின் பெங்களூரில் ஜவுளித்தொழில் நடத்தும் தொழிலதிபரின் மகன் கிருஷ் மாலி, 23. பெற்றோருடன் சண்டை போட்டு, கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். டாஸ்கர் டவுனில் உள்ள ஹோட்டல் ஒன்றில், ஜூன் 1ம் தேதி வாடகைக்கு அறை எடுத்து தங்கினார்.
ஜூன் 7ம் தேதி அறையை காலி செய்வதாக கூறி, 3,000 ரூபாயை செலுத்திவிட்டு அங்கிருந்து சென்றார்.
மறுநாள் காலை, கிருஷ் மாலி தங்கியிருந்த அறையை, துப்புரவு ஊழியர் சுத்தம் செய்தபோது, அறையில் சில ரூபாய் நோட்டுகள் சிதறிக் கிடந்ததை கவனித்தார்.
அவை கள்ளநோட்டுகள் என்பதை அறிந்து, உடனடியாக ஹோட்டல் மேனேஜர் முகமது ஷரீப் உத்தீனிடம் தகவல் தெரிவித்தார்.
அதிர்ச்சி அடைந்த அவர், அறைக்கு வந்து பார்த்தார். வெள்ளை காகிதங்கள் பண்டல், கள்ள நோட்டு துண்டுகள் இருப்பது தெரிந்தது. சந்தேகமடைந்த முகமது ஷரிப் உத்தீன், வாடகை பில்லுக்காக கிருஷ் மாலி கொடுத்த ரூபாயை சோதித்து பார்த்தார். அவை கள்ள நோட்டுகள் என்பது தெரிந்தது.
இதுகுறித்து, கமர்ஷியல் தெரு போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி, கிருஷ் மாலியை நேற்று கைது செய்தனர். செலவுக்கு பணம் போதாததால், தானே கள்ள நோட்டுகள் அச்சிட்டதை ஒப்புக்கொண்டார்.
இதற்காக பிரிண்டர், ஸ்கேனர்களை பையில் மறைத்து வைத்து, ஹோட்டல் அறைக்கு கிருஷ் எடுத்து வந்துள்ளார். அறையில் அமர்ந்தே யாருக்கும் சந்தேகம் வராமல், இந்த சாதனங்களை பயன்படுத்தி, 500 ரூபாய் கள்ள நோட்டுகள் அச்சிட்டுள்ளார்.
இந்த விஷயம், ஹோட்டல் ஊழியர்களுக்கு தெரியவில்லை. யார், யாரிடம் கள்ள நோட்டுகளை கொடுத்தார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.