பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை
பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை
பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை
ADDED : மே 25, 2025 03:55 AM

சிம்லா: ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்த, பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண் சோன்ஜின் அங்மோ, உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.
ஹிமாச்சல பிரதேசத்தின் கின்னவுர் மாவட்டத்தில், இந்தியா - -திபெத் எல்லையோரத்தில் அமைந்திருக்கும் சாங்கோ கிராமத்தைச் சேர்ந்தவர் சோன்ஜின் அங்மோ, 29. அவரது, 8 வயதில் 3ம் வகுப்பு படித்தபோது பார்வை இழந்தார்.
எனினும், 'பார்வைதான் போனது, லட்சியம் போகவில்லை' என்ற வைராக்கியத்துடன் படிப்பைத் தொடர்ந்த சோன்ஜின், டில்லி பல்கலைக்குட்பட்ட 'மிராண்டா ஹவுஸ்' கல்லுாரியில் முதுநிலை பட்டம் வரை பெற்று, 'யூனியன் பேங்க் ஆப் இந்தியா' வங்கி வாடிக்கையாளர் சேவை பிரிவில் பணியாற்றுகிறார்.
கடந்த 10 ஆண்டுகளாக மலை ஏற்றம், தடகளத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அவர், தன் விடாமுயற்சியால், கடந்த 19ல், உலகின் மிக உயர்ந்த 29,000 அடி உயர எவரெஸ்ட் சிகரத்தில் குழுவினருடன் ஏறி, நம் தேசியக்கொடியை பறக்க விட்டார்.
இதன் வாயிலாக, இந்த சாதனையை படைத்த, முதல் பார்வையற்ற மாற்றுத்திறனாளி இந்தியப் பெண் என்ற பெருமையை சோன்ஜின் பெற்றுள்ளார்.
உலக அளவில் எவரெஸ்டில் ஏறிய, பார்வையற்ற ஐந்தாவது மாற்றுத்திறனாளி சாதனையையும், இவர் படைத்துள்ளார்.