தேர்தல் பத்திரங்களில் காங்கிரசை விட 7 மடங்கு அதிக வருவாய் ஈட்டிய பா.ஜ.,
தேர்தல் பத்திரங்களில் காங்கிரசை விட 7 மடங்கு அதிக வருவாய் ஈட்டிய பா.ஜ.,
தேர்தல் பத்திரங்களில் காங்கிரசை விட 7 மடங்கு அதிக வருவாய் ஈட்டிய பா.ஜ.,
ADDED : பிப் 10, 2024 11:30 PM
புதுடில்லி :தேர்தல் பத்திரங்கள் வாயிலாக, 2022 - 23ம் நிதியாண்டில் மட்டும், மத்தியில் ஆளும் பா.ஜ., 1,300 கோடி ரூபாய் பெற்றுள்ளது. இது, இதே காலகட்டத்தில், காங்கிரஸ் பெற்றதை விட ஏழு மடங்கு அதிகம்.
டிபாசிட்
தனிநபர் அல்லது நிறுவனங்கள், வங்கி வாயிலாக தேர்தல் பத்திரங்களை வாங்கி, தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கலாம். இதில், எத்தனை பத்திரங்களை வேண்டுமானாலும் வாங்கலாம்.
இந்த பத்திரங்களில் வாங்குபவரின் பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்கள் இருக்காது. 15 நாட்களுக்குள் பத்திரத்தை பணமாக மாற்ற வேண்டும்; இல்லையெனில் தேர்தல் பத்திரங்களின் தொகை, பிரதமர் நிவாரண நிதியில் டிபாசிட் செய்யப்படும்.
இந்நிலையில், 2022 - 23ம் நிதியாண்டுக்கான ஆண்டு தணிக்கை அறிக்கையை, தலைமை தேர்தல் கமிஷனில் ஆளும் பா.ஜ., சமர்ப்பித்துள்ளது.
அதன்படி, இந்த காலகட்டத்தில், பா.ஜ.,வின் மொத்த பங்களிப்பு 2,120 கோடி ரூபாயாக உள்ளது.
இதில், 61 சதவீதம் அதாவது 1,272 கோடி ரூபாய், தேர்தல் பத்திரங்கள் வாயிலாக பெறப்பட்டதாக அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2021 - 22ம் நிதியாண்டில், பா.ஜ.,வின் மொத்த பங்களிப்பு 1,775 கோடி ரூபாயாக இருந்த நிலையில், 2022 - 23ம் நிதியாண்டில் 2,120 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
வருமானம்
கடந்த 2021 - -22ம் நிதி ஆண்டில், 1,917 கோடி ரூபாயாக இருந்த கட்சியின் மொத்த வருமானம், மதிப்பீட்டு காலத்தில் 2,360.8 கோடி ரூபாயாக இருப்பதாக பா.ஜ., குறிப்பிட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில், பா.ஜ.,வுக்கு வட்டியாக மட்டும் 237 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. மற்றொரு தேசிய கட்சியான காங்., 2022 - 23ம் நிதியாண்டில், தேர்தல் பத்திரங்கள் வாயிலாக 171 கோடி ரூபாய் பெற்றுஉள்ளது.
கடந்த 2021 - 22ம் நிதியாண்டில், 236 கோடி ரூபாய் பெறப்பட்ட நிலையில், காங்கிரசின் வருமானம் குறைந்துள்ளது.
மாநில கட்சிகளை பொறுத்தவரை, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், 2022 - 23ம் நிதியாண்டில், தேர்தல் பத்திரங்கள் வாயிலாக 34 கோடி ரூபாய் பெற்றுள்ளது.
தமிழகத்தில் ஆளும் தி.மு.க., உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் ஆண்டு தணிக்கை விபரங்கள் வெளியாகவில்லை.