Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/84 வினாடிகள் நீடித்த அபிஜித் முகூர்த்தத்தில் பால ராமர் விக்ரஹம் பிராண பிரதிஷ்டை

84 வினாடிகள் நீடித்த அபிஜித் முகூர்த்தத்தில் பால ராமர் விக்ரஹம் பிராண பிரதிஷ்டை

84 வினாடிகள் நீடித்த அபிஜித் முகூர்த்தத்தில் பால ராமர் விக்ரஹம் பிராண பிரதிஷ்டை

84 வினாடிகள் நீடித்த அபிஜித் முகூர்த்தத்தில் பால ராமர் விக்ரஹம் பிராண பிரதிஷ்டை

ADDED : ஜன 23, 2024 01:58 AM


Google News
Latest Tamil News
அயோத்தி, பால ராமர் விக்ரஹத்தின் முன் அமர்ந்து முறைப்படியான சடங்குகளை செய்த பிரதமர் நரேந்திர மோடி, சரியாக 84 வினாடிகள் நீடித்த அபிஜித் முகூர்த்தத்தில், ராமர் விக்ரஹத்திற்கான பிராண பிரதிஷ்டையை செய்து முடித்தார். அதன் பின், சாஷ்டாங்கமாக விழுந்து ராமப் பிரானை வழிபட்டார்.

அயோத்தி ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை நிகழ்வு நேற்று விமரிசையாக நடந்து முடிந்தது. கோவில் முன் போடப்பட்டு இருந்த நாற்காலிகளில் 8,000க்கும் மேற்பட்ட வி.வி.ஐ.பி.,க்கள் அமர்ந்திருக்க, புதுடில்லியில் இருந்து விமானம் வாயிலாக பிரதமர் மோடி அயோத்தி வந்தடைந்தார்.

தங்க நிறத்தில் ஜொலிக்கும் குர்தா, கிரீம் நிறத்திலான வேஷ்டி மற்றும் மேல் துண்டு அணிந்திருந்த பிரதமர் மோடி, கையில் பால ராமருக்கான வெள்ளி குடையை, பட்டு துணியில் ஏந்தியபடி கோவிலை நோக்கி நடந்து வந்தார். கோவில் கருவறைக்குள் அவர் நுழைந்ததும், அவருக்காக போடப்பட்டு இருந்த மரப்பலகையில் அமர்ந்தார்.

அவரை சுற்றி உத்தர பிரதேச கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் ஆகியோர் அமர்ந்தனர்.

முதலில் பிராண பிரதிஷ்டைக்கான சங்கல்பம் எடுத்துக் கொண்ட பிரதமர் மோடி, பின் அதற்கான சடங்குகளை செய்ய துவங்கினார். கோவில் அர்ச்சகர் மந்திரங்களை ஓத, பிரதிஷ்டைக்கான சடங்குகள் துவங்கின.

சில நிமிடங்களில் சடங்குகள் முடிவடைந்ததும், பிரதமர் மோடி பாவனையாக பால ராமர் விக்ரஹத்தின் கண்களை திறந்தார். சரியாக 84 வினாடிகள் நீடித்த அபிஜித் முகூர்த்தத்தில் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது.

அதன் பின் ராமர் விக்ரஹத்தின் முன் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து பிரதமர் வழிபட்டார். ராமரின் பாதங்களில் மலர்களை சமர்ப்பித்தார். பின், ஒவ்வொரு தலைவர்களாக ராமர் பாதத்தில் மலர்களை வைத்து வழிபட்டனர்.

அபிஜித் முகூர்த்தம் என்பது, ஜோதிட சாஸ்திரப்படி, நடுப்பகலின் முந்தைய மற்றும் பிந்தைய ௨௪ நிமிடங்களை குறிக்கும். இதில் குறிப்பிட்ட சில வினாடிகள் மட்டுமே மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது.

அதன்படி, நேற்று பகல் ௧௨:௨௯ல் இருந்து பகல் ௧௨:௩௧ மணிக்கு இடைப்பட்ட, குறிப்பிட்ட ௮௪ வினாடிகள் மிகவும் சிறப்பான நேரமாக கணிக்கப்பட்டது. இந்த நேரத்தில் பிராணப் பிரதிஷ்டை நடைபெற்றது.

சிவலிங்கத்துக்கு வழிபாடு

அயோத்தியில் ராமர் கோவில் அமைந்துள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி வளாகத்தின் குபேர் திலா பகுதியில் பழமையான சிவன் கோவில் உள்ளது. ராமர் கோவிலை நிர்மாணித்த ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையினர், இந்த சிவன் கோவிலையும் புனரமைத்தனர். ராமர் விக்ரஹத்தின் பிராண பிரதிஷ்டை முடிந்த பின், கோவில் வளாகத்தில் உள்ள குபேர் திலா வந்த பிரதமர் மோடி, சிவன் கோவிலில் உள்ள லிங்கத்தின் மீது தண்ணீர் ஊற்றி அபிஷேகம் செய்தார். பின் கோவிலை வலம் வந்து வழிபட்டார். சீதையை ராவணன் அபகரித்து சென்ற போது, சீதையை காப்பாற்ற வந்த ஜடாயு பறவை, ராவணனால் கொல்லப்பட்டது. அந்த ஜடாயுவுக்கு ராமர் கோவில் வளாகத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது. அதை, பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.''ஜடாயுவின் அத்தகைய கடமை உணர்வுதான் திறமையான மற்றும் தெய்வீக இந்தியாவின் அடிப்படை,'' என, பிரதமர் தெரிவித்தார்.



பணியாளர்களுக்கு கவுரவம்

உலகமே வியக்கும்படியாக அயோத்தி ராமர் கோவிலை கட்டி முடித்துள்ள கட்டடப் பணியாளர்களை அழைத்து, அவர்கள் மீது மலர் துாவி பிரதமர் மரியாதை செய்தார். இந்த நிகழ்வு காண்போரை நெகிழச் செய்வதாக அமைந்தது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us