துணிச்சலாக பணியாற்றிய பெண் அதிகாரிக்கு விருது
துணிச்சலாக பணியாற்றிய பெண் அதிகாரிக்கு விருது
துணிச்சலாக பணியாற்றிய பெண் அதிகாரிக்கு விருது
ADDED : ஜூன் 01, 2025 03:22 AM

ஜம்மு: 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையின் போது, ஜம்மு - காஷ்மீரின் சர்வதேச எல்லையில் துணிச்சலாக பணியாற்றிய பி.எஸ்.எப்., எனப்படும் எல்லை பாதுகாப்பு படையின் பெண் அதிகாரி நேஹா பண்டாரிக்கு, ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி விருது வழங்கி கவுரவித்தார்.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, ஆப்பரேஷன் சிந்துார் என்ற பெயரில், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை நம் ராணுவம் அழித்தது.
இதையடுத்து, இந்தியா - பாக்., இடையே எல்லையில் நான்கு நாட்கள் மோதல் நீடித்தது. பாக்., கெஞ்சியதை அடுத்து, சண்டை முடிவுக்கு வந்தது.
ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையின் போது, ஜம்மு - காஷ்மீரின் ஜம்முவில் உள்ள சர்வதேச எல்லையில், இந்திய எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த நேஹா பண்டாரி என்ற பெண் அதிகாரி பணியில் இருந்தார்.
துணிச்சலாக பணியாற்றிய இவர், சோதனைச்சாவடிக்கு அருகே வீரர்களை வழிநடத்தி அழைத்துச் சென்றார். சவாலான சூழ்நிலையை மிகவும் தைரியத்துடன் எதிர்கொண்ட நேஹா பண்டாரி, பாகிஸ்தானின் சதி திட்டங்களை முறியடித்தார்.
இந்நிலையில், நேஹா பண்டாரியை, ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி நேரில் அழைத்து பாராட்டி, விருது வழங்கி கவுரவித்தார்.
உத்தராகண்டைச் சேர்ந்த நேஹா பண்டாரியின் குடும்பம், ராணுவ பாரம்பரியத்தை கொண்டது. அவரது தாத்தா ராணுவத்தில் பணியாற்றிய நிலையில், தந்தை - தாய் ஆகியோர் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பணியாற்றி உள்ளனர்.