ADDED : ஜன 31, 2024 05:36 AM
சாம்ராஜ்நகர் : காட்டு யானை ஒன்று, வாகனம், வாகனமாக உணவு தேடிய வீடியோ, சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
தேசிய நெடுஞ்சாலைகளில், வாகனங்களை தடுத்து நிறுத்தி வனத்துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் சோதனையிடுவது சகஜம். ஆனால் காட்டு யானை ஒன்று, அனைத்து வாகனங்களையும் சோதனையிட்டு அனுப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
சாம்ராஜ்நகரை ஒட்டியுள்ள, தமிழகத்தின், கேருமாளா சாலையில் நேற்று முன் தினம் மாலை, ஒற்றை காட்டு யானை நடமாடியது. இது ஒவ்வொரு வாகனத்தையும் நிறுத்தி, உணவு உள்ளதா என, தேடியது.
லாரி, பஸ், பிக் அப் வாகனம், டெம்போ உட்பட, எந்த வாகனத்தையும் விடாமல் தும்பிக்கையை விட்டு, உணவை தேடி பார்த்தது. பஸ்சில் இருந்த பயணி ஒருவர், தன் மொபைல் போனில் பதிவு செய்து, சமூக வலைதளத்தில் பதிவேற்றினார்.
சாலை மத்தியில் யானை வந்ததால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.