80 வயது மூதாட்டியை நடுரோட்டில் விட்டு சென்ற கல்நெஞ்ச மகள்
80 வயது மூதாட்டியை நடுரோட்டில் விட்டு சென்ற கல்நெஞ்ச மகள்
80 வயது மூதாட்டியை நடுரோட்டில் விட்டு சென்ற கல்நெஞ்ச மகள்
ADDED : ஜன 07, 2024 02:31 AM
சர்ஜாபூர : எண்பது வயது மூதாட்டியை தாக்கியதுடன், நடுரோட்டில் விட்டுச் சென்ற, கல்நெஞ்சம் கொண்ட மகள், மருமகனை போலீசார் தேடுகின்றனர்.
பெங்களூரு, சர்ஜாபூர் ரோடு வி.கல்லஹள்ளி கிராமத்தில் உள்ள கோவில் அருகே, நேற்று காலை ஒரு மூதாட்டி மயங்கிய நிலையில் இருந்தார்.
அவரைப் பார்த்து அந்த வழியாக சென்றவர்கள், அதிர்ச்சி அடைந்தனர்.
மூதாட்டியின் முகத்தில் தண்ணீர் தெளித்து, அவரை எழுப்பினர். பின்னர் அவருக்கு உணவு கொடுத்தனர். அவர் சீரான நிலைக்கு வந்தார். மூதாட்டியிடம் விசாரித்தனர். தன் பெயர் ஒபவ்வா, 80, என்று அவர் கூறினார்.
மூதாட்டி கூறியதாவது:
டொம்மசந்திராவில் உள்ள மகள் ஆஷா ராணி வீட்டில் வசித்தேன். மகளும், மருமகன் மஞ்சுநாத்தும் சேர்ந்து, என்னை துன்புறுத்தினர். நேற்று முன்தினம் இரவு இருவரும் சேர்ந்து என்னை தாக்கினர்.
பின்னர் காரில் அழைத்து வந்து இங்கு விட்டுச் சென்றனர். இரவு முழுதும் குளிரில் நடுங்கினேன். என் காலில் அடிபட்டு உள்ளது. என்னால் நடக்க முடியவில்லை.
இவ்வாறு கூறி, மூதாட்டி கதறி அழுதார்.
மூதாட்டியை, அப்பகுதி மக்கள், ஆசிரமத்தில் கொண்டு விட்டனர். சம்பவ இடத்திற்கு வந்து சர்ஜாபூர் போலீசார் விசாரித்தனர்.
அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த, கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். காரின் வாகன பதிவெண் நம்பர் சரியாக தெரியவில்லை. மூதாட்டியின் மகன், மருமகனை போலீசார் தேடிவருகின்றனர்.