ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்ற 11,000 பேர் அடங்கிய கமிட்டி
ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்ற 11,000 பேர் அடங்கிய கமிட்டி
ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்ற 11,000 பேர் அடங்கிய கமிட்டி
ADDED : ஜன 11, 2024 03:47 AM
பெங்களூரு: ''காங்கிரசின் ஐந்து வாக்குறுதித் திட்டங்களை நிறைவேற்ற, காங்கிரஸ் பிரமுகர்கள், தொண்டர்கள் என 11,000 பேர் கொண்ட கமிட்டிகள் அமைக்கப்படும். இவர்களுக்கு அரசு கஜானாவில் இருந்து கவுரவ நிதி வழங்கப்படும்,'' என, முதல்வர் சித்தராமையா அறிவித்தார்.
சட்டசபை தேர்தலின்போது, காங்கிரஸ் தரப்பில் ஐந்து வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டன. இதில், 'கிரிஹ ஜோதி, கிரிஹ லட்சுமி, அன்ன பாக்யா, சக்தி' ஆகிய நான்கு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
ஆனால், ஏழை, எளிய மக்களை முழுமையாக சென்றடையவில்லை என்று பல தரப்பிலும் குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளன.
இதற்கிடையில், வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் 3,000 ரூபாயும்; டிப்ளமோ படித்தவர்களுக்கு 1,500 ரூபாயும் ஊக்கத்தொகை வழங்கும் 'யுவநிதி' திட்டத்துக்கான விண்ணப்பம் பெறுவது, டிசம்பர் 26ல் துவக்கப்பட்டது. இத்திட்டம், இம்மாதம் 15ம் தேதி, ஷிவமொகாவில் முதல்வர் சித்தராமையா, துவக்கி வைக்கிறார்.
'நாங்கள் சொன்னதை செய்துள்ளோம்' என்று காண்பிப்பதற்காக, கண் துடைக்கும் வேலை மட்டுமே செய்தனர். இதனால், ஆளுங்கட்சி மீது மக்கள் கடும் ஆக்ரோஷத்தில் உள்ளனர். இது லோக்சபா தேர்தலில் பின்னடைவு ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. இந்நிலையில், பெங்களூரு காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த கட்சி பிரமுகர்கள் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் சித்தராமையா நேற்று பேசியதாவது:
வாக்குறுதித் திட்டங்களை சரியாக அமல்படுத்துவதற்காக, மாநில அளவில் கமிட்டி அமைக்கப்படும்.
இது போன்று, மாவட்டம், சட்டசபை அளவிலும் கமிட்டிகள் அமைக்கப்படும்.
மாநில அளவிலான கமிட்டியில், கேபினட் அமைச்சர் அந்தஸ்துடன், ஒரு தலைவர், இணை அமைச்சர் அந்தஸ்துடன் ஐந்து துணை தலைவர்கள் இருப்பர். தேர்தலில் தோற்றவர்கள், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு இந்த பதவி வழங்கப்படும்.
ஒவ்வொரு கமிட்டியிலும், 31 உறுப்பினர்கள் இருப்பர். கட்சி தொண்டர்களுக்கு உறுப்பினர் பதவி வழங்கப்படும். இவர்களுக்கு அலுவலகம், கவுரவ நிதி வழங்கப்படும். மாதந்தோறும் கூடுதலாக 50 ரூபாய் தரப்படும்.
தாலுகா அளவில், 21 உறுப்பினர்கள் இருப்பர். இப்படி, 224 சட்டசபை தொகுதிகளில், 11,000 கட்சி தொண்டர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். அனைவருக்கும் அரசின் கஜானாவில் இருந்து கவுரவ நிதி வழங்கப்படும்.
இதற்காக ஆண்டுக்கு 16 கோடி ரூபாய் செலவாகும். இது ஒரு பெரிய சுமை கிடையாது. வாக்குறுதித் திட்டங்கள் மீதான அவ பிரசாரத்துக்கு பதிலடி கொடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.