ADDED : ஜன 07, 2024 01:28 AM
மும்பை, விடுமுறைக்கு சென்று விட்டு மீண்டும் மஹாராஷ்டிரா திரும்புவோரை, ஐந்து நாட்கள் தனிமைப்படுத்த மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
மஹாராஷ்டிராவில் நேற்று முன்தினம் மட்டும் புதிதாக 129 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. இதில் 31 பேர் மும்பைவாசிகள்.
இதையடுத்து மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 630 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்று மாநிலம் முழுதும் அதிகரித்து வரும் நிலையில், மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
இதன்படி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைக்கு வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களுக்கு சென்று விட்டு மஹாராஷ்டிரா திரும்பும் நபர்கள், தங்களை தாங்களே ஐந்து நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.
அவ்வாறு திரும்பும் நபர்களுக்கு காய்ச்சல் அல்லது சளி அறிகுறிகள் இருந்தால், அவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியும் சோதனை கட்டாயம் செய்ய வேண்டும்.
இது தொடர்பாக கொரோனா பணிக்குழு தலைவர் டாக்டர் கங்காகேத்கர் கூறியதாவது:
ஆண்டு இறுதி விடுமுறைக்காக வெளியே சென்று திரும்பும் நபர்களுக்கு கொரோனா தொற்று பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே அவர்கள் கட்டாயம் வீட்டிலேயே ஐந்து நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ளவேண்டும்.
மருத்துவமனை செல்லவேண்டியதில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.