போலீஸ் முன் விசாரணைக்கு தர்ஷன் உட்பட 5 நடிகர்கள் ஆஜர்
போலீஸ் முன் விசாரணைக்கு தர்ஷன் உட்பட 5 நடிகர்கள் ஆஜர்
போலீஸ் முன் விசாரணைக்கு தர்ஷன் உட்பட 5 நடிகர்கள் ஆஜர்
ADDED : ஜன 12, 2024 11:20 PM
பெங்களூரு: 'பப்'பில் இரவு முழுவதும் பார்ட்டி நடத்திய வழக்கு தொடர்பான விசாரணைக்கு, தர்ஷன் உட்பட 5 நடிகர்கள் நேற்று ஆஜராகினர். இவர்களை பார்க்க ரசிகர்கள் குவிந்ததால், போலீஸ் நிலையம் முன் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னட நடிகர் தர்ஷன் நடிப்பில் வெளியான 'காட்டேரா' திரைப்படம் வெற்றி அடைந்துள்ளது. பட வெற்றியை கொண்டாடும் வகையில், பெங்களூரு சுப்பிரமணியநகரில் உள்ள, ஜெட்லேக் 'பப்'பில் கடந்த 3ம் தேதி இரவு, 'காட்டேரா' படக்குழுவினர், நடிகர், நடிகையருக்கு 'பார்ட்டி' அளித்தனர்.
மறுநாள் காலை 6:00 மணி வரை விடிய விடிய 'பார்ட்டி' நடந்து உள்ளது. நள்ளிரவு 1:00 மணி வரை மட்டுமே 'பார்ட்டி' நடத்த அனுமதி உள்ள நிலையில், இதை மீறியதாக 'பப்' உரிமையாளர் ரேகா ஜெகதீஷ் மீது, சுப்பிரமணியநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ரசிகர்கள் குவிந்தனர்
இதுதொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி, காட்டேரா படத்தின் நடிகர் தர்ஷன், 'பார்ட்டி'யில் பங்கேற்ற நடிகர் அபிஷேக் அம்பரீஷ், டோலி தனஞ்ஜெய், நினாஷம் சதீஷ், சிக்கண்ணா, படத்தின் இயக்குனர் தருண் சுதீர், இசையமைப்பாளர் ஹரிகிருஷ்ணா, திரைப்பட தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் ஆகிய எட்டு பேருக்கு, சுப்பிரமணியநகர் போலீசார், சம்மன் அனுப்பி இருந்தனர்.
நேற்று மாலை 5:00 மணிக்கு சுப்பிரமணியநகர் போலீஸ் நிலையத்தில், விசாரணை அதிகாரி முன், தர்ஷன் உட்பட 8 பேரும் ஆஜராகினர். அவர்களிடம் ஒரு மணி நேரம், விசாரணை நடத்திய பின்னர், போலீசார் அனுப்பி வைத்தனர்.
போக்குவரத்து நெரிசல்
நடிகர்களை காண, போலீஸ் நிலையம் முன் ரசிகர்கள் குவிந்தனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கித் தவித்தன.
ரசிகர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல், போலீசார் திண்டாடினர்.
பெங்களூரில் இதுவரை இரவு முழுதும், 'பார்ட்டி' நடந்ததே இல்லையா? அரசியல்வாதிகள் இரவு முழுதும் 'பார்ட்டி' கொடுக்கின்றனர். முதல்வர் சித்தராமையா கூட, அதிகாலை 3:00 மணி வரை, 'பார்ட்டி' கொடுக்கிறார். அப்படி என்றால் அவருக்கு, போலீசார் நோட்டீஸ் அனுப்புவரா?
நாராயணசாமி,
வக்கீல்,
'காட்டேரா' படக்குழு
தர்ஷனுக்கு குறி?
தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் அளித்த பேட்டி:
காட்டேரா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று உள்ளது. கடந்த 3ம் தேதி இரவு 1:00 மணிக்கு முன்பு, 'பார்ட்டி' முடித்துவிட்டோம். யாரும் உணவு சாப்பிடவில்லை. 'பப்' சமையல் கலைஞர்கள் சென்றுவிட்டனர்.
உணவு தயார் செய்து கொடுக்கும்படி, 'பப்' உரிமையாளரிடம் கேட்டேன். அவரும் அதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தார். உணவு சாப்பிட்டு செல்வதற்கு, கூடுதலாக நேரம் ஆகிவிட்டது.
நாங்கள் அந்த 'பப்'பிற்கு, சினிமா பிரபலங்களாக செல்லவில்லை. சாதாரண வாடிக்கையாளராகச் சென்றோம். வாடிக்கையாளர்களுக்கு சம்மன் கொடுத்து, விசாரணைக்கு அழைப்பது இதுவே முதல்முறை. நடிகர் தர்ஷனை சிலர் குறி வைக்கின்றனர். அது யார் என்று எல்லாருக்கும் தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.