ADDED : ஜன 27, 2024 11:10 PM
விவேக்நகர்: வீடு புகுந்து ரவுடியை கொன்ற வழக்கில், நான்கு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு, விவேக்நகர் மாயாபஜாரில் வசித்தவர் சதீஷ் என்ற மிலிட்டரி சதீஷ், 30. ரவுடியான இவர் மீது குற்ற வழக்குகள் உள்ளன.
கடந்த 24ம் தேதி அதிகாலை 3:00 மணிக்கு, சதீஷ் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், துாங்கிக் கொண்டிருந்த அவரை, ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்தனர். விவேக்நகர் போலீசார் விசாரித்தனர்.
இந்நிலையில், சதீஷை கொலை செய்ததாக, விவேக்நகரின் பிரசாந்த், 20, தனுஷ், 20, கம்லெட், 21, சுனில், 22 நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டனர்.
கடந்த 23ம் தேதி இரவு, விவேக்நகரில் உள்ள பாரில் வைத்து, கொலையான சதீஷுக்கும், கைதான நான்கு பேருக்கும், தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது நான்கு பேரையும், சதீஷ் தாக்கி உள்ளார். இதனால் நான்கு பேரும் சேர்ந்து, திட்டம் தீட்டி சதீஷை போட்டு தள்ளியது, விசாரணையில் தெரிந்து உள்ளது.
கைதானவர்கள் மீதும் குற்ற வழக்குகள் இருப்பதாக, பெங்களூரு மத்திய மண்டல துணை போலீஸ் கமிஷனர் சேகர் தெக்கண்ணவர் கூறி உள்ளார்.