ADDED : ஜன 11, 2024 11:23 PM
பெங்களூரு: போலி டீ துாள் தயாரித்து விற்பனை செய்த வீட்டில், போலீசார் சோதனை நடத்தி, 200 கிலோ போலி டீ துாளை பறிமுதல் செய்தனர்.
பெங்களூரு ரூரல், ராம்நகர், கோலார், சிக்கபல்லாபூர், துமகூரு உட்பட, பல மாவட்டங்களில், '3 ரோசஸ்' டீ துாள் வர்த்தகம் குறைந்தது.
இதற்கான காரணத்தை கண்டறிய, டீ துாள் நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதிகள், தகவல் சேகரித்தனர். அப்போது '3 ரோசஸ்' பெயரில், போலியான டீ துாள் மார்க்கெட்டில் விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக, பெங்களூரின், மாதநாயகனஹள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தியபோது, கங்கொண்டனஹள்ளியில் வீடு ஒன்றில், போலி டீ துாள் தயாரிப்பது தெரியவந்தது.
நேற்று காலை போலீசாரும், '3 ரோசஸ்' நிறுவன அதிகாரிகளும், அந்த வீட்டுக்கு சென்று திடீர் சோதனை நடத்தி, 200 கிலோ போலி டீ துாள், இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.
போலீசாரை கண்டதும், வீட்டு உரிமையாளர் மாதுசிங் தப்பியோடி விட்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.