தலித்துகளை ஏன் ஆதரிக்கவில்லை? மேலிடத்திற்கு பா.ஜ., - எம்.பி., கேள்வி
தலித்துகளை ஏன் ஆதரிக்கவில்லை? மேலிடத்திற்கு பா.ஜ., - எம்.பி., கேள்வி
தலித்துகளை ஏன் ஆதரிக்கவில்லை? மேலிடத்திற்கு பா.ஜ., - எம்.பி., கேள்வி
ADDED : ஜூலை 10, 2024 04:31 AM

விஜயபுரா, : ''தலித்துகளை ஏன் ஆதரிக்கவில்லை?'' என, பா.ஜ., மேலிடத்திற்கு, எம்.பி., ரமேஷ் ஜிகஜினகி கேள்வி எழுப்பியுள்ளார்.
விஜயபுரா பா.ஜ., -- எம்.பி., ரமேஷ் ஜிகஜினகி, 72. பிரதமர் நரேந்திர மோடியின் முதல் அமைச்சரவையில் குடிநீர் மற்றும் சுகாதார துறை இணை அமைச்சராக பதவி வகித்தார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் ஏழாவது முறை எம்.பி.,யாக வெற்றி பெற்றார். மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். கிடைக்கவில்லை என்பதால் அதிருப்தி அடைந்தார்.
இந்நிலையில், விஜயபுராவில் தன் எம்.பி., அலுவலகத்தை ரமேஷ் ஜிகஜினகி நேற்று திறந்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி:
எனக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்காததால் வருத்தமில்லை. எனக்கு பதவி தரவேண்டிய அவசியம், அவர்களுக்கு ஏற்படவில்லை என்று நினைக்கிறேன்.
பா.ஜ., தலித்களுக்கு எதிரான கட்சி. இதனால் அக்கட்சியில் சேர வேண்டாம் என்று என்னிடம் பலர் கூறினர். ஆனால் தொகுதி மக்களின் அழுத்தத்தால் கட்சியில் சேர்ந்தேன்.
எம்.பி.,யாக பதவியேற்ற பின், டில்லியில் இருந்து விஜயபுரா வந்தபோது, தொகுதி மக்கள் என்னை ஒரு மாதிரி பார்த்தனர்.
தென் மாநிலங்களில் இருந்து, தலித் சமூகத்தை சேர்ந்த நான், ஏழு முறை வெற்றி பெற்றுள்ளேன். அனைத்து உயர் ஜாதியினரும் அமைச்சர் ஆகியுள்ளனர். தலித்துகளை மட்டும் பா.ஜ., ஆதரிக்காதது ஏன்?
இந்த கேள்வியை எனக்குள் நானே பல முறை கேட்டு உள்ளேன். இதனால் எனது மனது வலிக்கிறது. கர்நாடகா பா.ஜ.,வில் சிலர், எனக்கு எதிராக செயல்படுகின்றனர்.
மைசூரு மூடாவில் நடந்த முறைகேடு குறித்து நேர்மையான விசாரணை நடக்க வேண்டும். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கும், காங்கிரஸ் அரசு நிலம் ஒதுக்கியுள்ளது. ஆனால் அது எந்த இடம் என்று என்னிடம் சரியான தகவல் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.