ரேணுகா சாமி உடலில் 'எலக்ட்ரிக் ஷாக்' பொருட்கள் வாங்க பணம் கொடுத்தது யார்?
ரேணுகா சாமி உடலில் 'எலக்ட்ரிக் ஷாக்' பொருட்கள் வாங்க பணம் கொடுத்தது யார்?
ரேணுகா சாமி உடலில் 'எலக்ட்ரிக் ஷாக்' பொருட்கள் வாங்க பணம் கொடுத்தது யார்?
ADDED : ஜூலை 07, 2024 03:23 AM
பெங்களூரு: ரேணுகா சாமி உடலில் மின்சாரம் பாய்ச்ச, எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்குவதற்கு, பவித்ராவின் தோழி சமதா பணம் கொடுத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சித்ரதுர்காவைச் சேர்ந்த ரேணுகாசாமி, 33, என்பவரை கொலை செய்த வழக்கில், நடிகர் தர்ஷன், பவித்ரா கவுடா உட்பட 17 பேர் கைதாகி சிறையில் உள்ளனர்.
நான்கு நாட்களுக்கு முன்பு, பவித்ராவின் நெருங்கிய தோழி சமதா என்பவர், சிறைக்கு வந்து தர்ஷனை மட்டும் சந்தித்துவிட்டுச் சென்றார்.
இதனால் சந்தேகம் அடைந்த அன்னபூர்னேஸ்வரி நகர் போலீசார், விசாரணைக்கு ஆஜராகுமாறு சமதாவுக்கு 'சம்மன்' அனுப்பினர்.
இதற்கிடையில் சமதா குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
சமதா, பவித்ராவுக்கு தோழி மட்டும் இல்லை. தொழிலின் பங்குதாரரும் கூட. ரேணுகாசாமி கொலை நடப்பதற்கு முன்பும், பின்பும் சமதாவிடம், பவித்ரா மொபைல் போனில் அடிக்கடி பேசி உள்ளார்.
ரேணுகா சாமி உடலில் மின்சாரம் பாய்ச்சியது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்தது. உடலில் மின்சாரம் பாய்ச்சவும், எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்குவதற்கும், கொலை வழக்கில் கைதான தன்ராஜ் 'போன் பே' நம்பருக்கு, பணம் அனுப்புமாறு பவித்ரா கூறியதால், சமதா 3,000 ரூபாய் அனுப்பி வைத்ததும் தெரிந்துள்ளது.
இதுகுறித்து விசாரணைக்கு ஆஜராகும்போது, சமதாவிடம் கேள்வி எழுப்ப, போலீசார் தயாராக உள்ளனர்.
இதற்கிடையில் கொலை வழக்கு தொடர்பாக 200க்கும் மேற்பட்ட சாட்சிகளை, போலீசார் தயார் செய்து வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் தர்ஷன், பவித்ராவின் மொபைல் போன்களை பறிமுதல் செய்த போலீசார், மொபைல் போன்களில் இருந்து அளிக்கப்பட்ட சில தகவல்களை மீட்டெடுக்க, ஹைதராபாத்தில் உள்ள தடய ஆய்வியல் மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ரேணுகா சாமி உடலை பிரேத பரிசோதனை செய்த, விக்டோரியா அரசு மருத்துவமனையின் டாக்டருக்கும், போலீசார் கடிதம் எழுதியுள்ளனர்.
ரேணுகா சாமியின் உடல் எத்தனை மணிக்கு 'ப்ரீசரில்' வைக்கப்பட்டது; அவர் எத்தனை மணிக்கு இறந்தார். பண்ணை வீட்டுக்கு வந்த பின் ரேணுகா சாமி சாப்பிட்ட உணவு, உயிரிழந்த பின், உடலில் எந்த நிலையில் இருந்தது ஆகிய தகவல்களை வழங்கும்படி கேட்டுள்ளனர்.