ADDED : ஜூன் 20, 2024 02:31 AM
பஞ்சசீல் விஹார்: தெற்கு டில்லியின் ஒரு வீட்டில், 42 வயதான உகாண்டா நாட்டுப் பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
மாளவியா நகர், பஞ்சசீல் விஹார் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வெளிநாட்டுப் பெண் மயங்கிக் கிடப்பதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன் தினம் இரவு 10:51 மணி அளவில் தகவல் வந்தது.
சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். அவரை மீட்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
முதற்கட்ட விசாரணையில், அந்த பெண் கடந்த மூன்று மாதங்களாக மற்றொரு உகாண்டா பெண்ணுடன் அங்கு வசித்து வந்ததும், இருவரும் சிகையலங்கார நிபுணர்களாக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது.
இவரது தோழி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3:30 மணியளவில் அறையை விட்டு வெளியேறி சென்றுள்ளார். மாலை 5:30 மணியளவில் அவர் திரும்பி வந்தபோது, இவர் தரையில் விழுந்து கிடந்துள்ளார்.
பிரேத பரிசோதனைக்கு பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
மார்ச் 13 அன்று வழங்கப்பட்ட சுற்றுலா விசாவில் அவர் இந்தியா வந்துள்ளார். உகாண்டா துாதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.