அடுத்த 4 ஆண்டில் 100 பணியாளர்கள் என்பதே இலக்கு!
அடுத்த 4 ஆண்டில் 100 பணியாளர்கள் என்பதே இலக்கு!
அடுத்த 4 ஆண்டில் 100 பணியாளர்கள் என்பதே இலக்கு!
ADDED : ஜூன் 02, 2024 01:32 AM

கும்பகோணத்தில், 'பவன் பைப் கார்ப்பரேஷன்' என்ற நிறுவனத்தை நடத்தி வரும் ஸ்ரீகாந்த்:
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியத்தில் தான், 10-ம் வகுப்பு வரை படித்தேன். என் அண்ணன் படித்து விட்டு, சென்னையில் வேலை செய்ய துவங்கியதால், நானும் சென்னை வந்து கல்லுாரி படிப்பை முடித்து, ஹார்டுவேர்ஸ் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தேன்.
சில மாதங்கள் வேலை பார்த்த பின், என்னை சிதம்பரத்துக்கு அனுப்பி, அங்கிருந்த கடையை பார்க்க கூறினர். பின், கும்பகோணத்துக்கு சென்று புதிதாக ஒரு கிளையை துவங்கும்படி கூறினர்.
அதற்கு முன், நான் கும்பகோணத்துக்கு சென்றதே இல்லை. என்றாலும், அங்கே சென்று கடைக்கான இடம் பிடித்து, நானும் என் மனைவியும் தான் கடையை நடத்தினோம்.
நான் மார்க்கெட்டிங் சென்று விடுவேன். என் மனைவி கடையை கவனித்துக் கொண்டார். கடுமையாக உழைத்ததில், அதிகமாக வருமானம் காட்டினேன். இதனால் மாதந்தோறும் இன்சென்ட்டிவ் கிடைத்தது.
தாராசுரத்தில் உள்ள ஒரு கடையில் எப்போதும் கூட்டம் மொய்க்கும். அந்தக் கடை முதலாளியிடம் காத்திருந்து தான் பணம் வாங்க வேண்டும்.
அப்படி ஒருநாள் பணம் வாங்கும் போது, 'கடையில ஓவர் கூட்டமா இருக்கு. குடும்பத்தைக் கவனிக்க முடியல. ஒரே தலைவலியா இருக்கு' என்றார்.
அதைக் கேட்டவுடன், 'உன்னால நடத்த முடியலேன்னா எங்கிட்ட கொடுத்துடு' என்று காமெடியாக பேசிவிட்டு வந்துவிட்டேன்.
மறுநாள் காலை, 'சார், நீங்க கேட்ட மாதிரி கடையைக் கொடுத்துடுறேன். என் குடும்பத்துல எல்லாரும் ஓகே சொல்லிட்டாங்க' என்றார். 10 லட்சம் ரூபாய் முதலீட்டில் கடையை எடுத்து நடத்த ஆரம்பித்தேன்.
ஒரு பொங்கலின் போது, 50 டன் சுண்ணாம்பு விற்றது, அந்தப் பகுதியில் யாரும் செய்யாத சாதனை. என் பிசினஸ் சிறப்பாக வளர்ச்சி கண்டது.
நாமே ஏன் பைப்புகள் உட்பட பல வகையான பொருட்களை தயார் செய்யக் கூடாது என்ற யோசனை வந்தது. திருபுவனம் சிட்கோவில் பைப் உட்பட பலவிதமான பொருட்களை தயார் செய்ய ஆரம்பித்தேன்.
என் மனைவிக்கு தனியாக ஒரு பிசினஸை ஆரம்பித்து தருவதற்காக டைல்ஸ் ஷோரூம் ஒன்றை திறந்திருக்கிறேன். அவர் அதை சிறப்பாக நடத்தி வருகிறார்.
இப்போது என் எல்லா பிசினஸ்களையும் சேர்த்தால், கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய் அளவுக்கு, 'டர்ன் ஓவர்' இருக்கும். ஆனால், அதில் எனக்கு பெரிய ஆர்வம் இல்லை.
நான் பணியாளர்கள் மீது தான் அதிக கவனம் செலுத்துகிறேன். ஒரு நிறுவனத்தில் மகிழ்ச்சியுடன் வேலை பார்க்கும் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், டர்ன் ஓவர் தானாகவே அதிகரிக்கும் தானே!
இப்போதைக்கு, 35 பேர் வேலை பார்க்கின்றனர். அடுத்த நான்கு ஆண்டுகளில், 100 பேர் வேலை பார்க்க வேண்டும் என்பதே என் எண்ணம்.