'பவர் டிவி'க்கு விதித்த தடை நீக்கியது உச்ச நீதிமன்றம்
'பவர் டிவி'க்கு விதித்த தடை நீக்கியது உச்ச நீதிமன்றம்
'பவர் டிவி'க்கு விதித்த தடை நீக்கியது உச்ச நீதிமன்றம்
ADDED : ஜூலை 13, 2024 01:07 AM

புதுடில்லி: முறையான உரிமம் இல்லாத காரணத்தால், 'பவர் டிவி' செய்திச் சேனலை ஒளிபரப்ப தடை விதித்து, கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, 'பவர் ஸ்மார்ட் மீடியா லிமிடெட்' நிறுவனம் சார்பில், 'பவர் டிவி' என்ற செய்திச் சேனல் இயங்கி வருகிறது.
இந்த சேனலுக்கான ஒளிபரப்பு அனுமதி, 2021 அக்டோபருடன் முடிவடைந்தது. இதை புதுப்பிக்கக் கோரி, 2022 டிசம்பரில் பவர் டிவி செய்திச் சேனல் விண்ணப்பித்தது. இந்த விண்ணப்பம் ஏற்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
மதச்சார்பற்ற ஜனதா தள தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவ கவுடாவின் பேரனும், முன்னாள் எம்.பி.,யுமான பிரஜ்வல் ரேவண்ணா குறித்த பாலியல் குற்றச்சாட்டு செய்திகளை, பவர் டிவி செய்திச் சேனல் தொடர்ச்சியாக ஒளிபரப்பி வந்தது.
பவர் டிவி செய்திச் சேனலால் பாதிக்கப்பட்ட ஐ.பி.எஸ்., அதிகாரி பி.ஆர்.ரவிகாந்த கவுடா, முன்னாள் எம்.எல்.சி., ரமேஷ் கவுடா ஆகியோர், அந்த சேனலுக்கு எதிராக, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அதில், முறையான உரிமமின்றி சேனல் இயங்கி வருவதாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஆர்.கிருஷ்ண குமார், அடுத்த விசாரணை வரை, ஒளிபரப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள, பவர் டிவிக்கு தடை விதித்தார்.
இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பவர் டிவி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அமர்வு கூறியதாவது:
இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என, நாங்கள் நம்புகிறோம். சேனலை ஒளிபரப்ப தடை விதித்து, கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது. பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை பாதுகாக்க அரசு கடமைப்பட்டுள்ளது.
இவ்வாறு அமர்வு கூறியது.