'சிட் பண்ட்' நிறுவன அதிகாரியின் உடலை கூறு போட்ட கொடூரம்
'சிட் பண்ட்' நிறுவன அதிகாரியின் உடலை கூறு போட்ட கொடூரம்
'சிட் பண்ட்' நிறுவன அதிகாரியின் உடலை கூறு போட்ட கொடூரம்
ADDED : ஜூன் 09, 2024 03:34 AM

பெங்களூரு: கர்நாடகாவில் 5 லட்சம் ரூபாயை ஏமாற்றியதால், 'சிட் பண்ட்' நிறுவன ஊழியரை கொன்று, உடலை துண்டு துண்டாக வெட்டி கால்வாயில் வீசியவர் கைது செய்யப்பட்டார்.
கர்நாடகா மாநிலம் பெங்களூரு, சம்பிகேஹள்ளி பகுதியில் வசித்தவர் ஸ்ரீநாத், 34. ஒரு 'சிட் பண்ட்' நிறுவனத்தில் பணியாற்றினார். கடந்த மாதம் 28ம் தேதி காலை வீட்டிலிருந்து வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. மொபைல் போன் 'சுவிட்ச் ஆப்' ஆகியிருந்தது.
அவரது மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில், மாதவராவ், 35, என்பவர் வீட்டிற்கு ஸ்ரீநாத் கடைசியாக சென்றது தெரிய வந்தது. அங்கு போலீசார் சென்றபோது, வீடு பூட்டி கிடந்தது. கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, மாதவராவ் வீட்டிற்குள் ஸ்ரீநாத் செல்லும் காட்சிகள் இருந்தன. வெளியே வரும் காட்சிகள் இல்லை.
கடந்த 28ம் தேதி நள்ளிரவு வீட்டில் இருந்து, மூன்று பைகளை எடுத்துக் கொண்டு, மாதவராவ் வெளியே வருவதும், பைக்கில் அவர் சென்ற காட்சிகளும் இருந்தன. அவரது மொபைல் எண்ணும் 'சுவிட்ச் ஆப்' ஆகியிருந்தது. கடந்த 5ம் தேதி இரவு, ஆந்திராவில் மாதவராவை, பெங்களூரு போலீசார் கைது செய்தனர். விசாரணையில் ஸ்ரீநாத்தை கொன்றதை அவர் ஒப்புக்கொண்டார்.
ஸ்ரீநாத் வேலை செய்த சிட் பண்ட் நிறுவனத்தில் மாதவராவ் 5 லட்சம் ரூபாய் பணம் கட்டி இருந்தார். அந்த நிறுவனத்திற்கு அடிக்கடி சென்றார். அவருக்கும், ஸ்ரீநாத்துக்கும் பழக்கம் ஏற்பட்டு, நண்பர்களாக மாறினர். மாதவராவ் வீட்டிற்கு, ஸ்ரீநாத் அடிக்கடி சென்று உள்ளார். மாதவராவ் மனைவிக்கும், ஸ்ரீநாத்துக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இருவரும் மொபைல் போனிலும் பேசி உள்ளனர்.
இதற்கிடையில் மாதவராவ் கட்டிய 5 லட்சம் ரூபாயை திரும்ப தராமல் ஸ்ரீநாத் ஏமாற்றி உள்ளார். இதனால் அவர்களுக்கு தகராறு ஏற்பட்டது. 'என் மனைவியுடன் கள்ளக்காதல் வைத்து உள்ளாயா?' என கேட்டு ஸ்ரீநாத்திடம், மாதவராவ் பிரச்னை செய்துள்ளார். கடந்த 28ம் தேதி காலையில் ஸ்ரீநாத்தை, மாதவராவ் தன் வீட்டிற்கு வரவழைத்தார்.
அங்கு ஏற்பட்ட தகராறில், ஸ்ரீநாத் தலையில் இரும்புக் கம்பியால் அடித்து, மாதவராவ் கொன்றுள்ளார். பின்னர் அரிவாளை எடுத்து ஸ்ரீநாத் உடலை, மாதவராவ் துண்டு, துண்டாக வெட்டி உள்ளார். இரவு வரை வீட்டிற்குள் இருந்த மாதவராவ், நள்ளிரவில் மூன்று சாக்கு பைகளில் ஸ்ரீநாத் உடல் பாகங்களை போட்டு, பைக்கில் எடுத்துச் சென்று கால்வாயில் வீசிவிட்டு, ஆந்திரா தப்பியதும் தெரிந்தது.
மாதவராவ் கொடுத்த தகவலின்பேரில், கால்வாயில் வீசப்பட்ட ஸ்ரீநாத் உடல்களை தேடும் பணி நடக்கிறது. மூன்று நாட்கள் ஆகியும் உடல் சிக்கவில்லை.