ADDED : ஜூன் 06, 2024 12:18 AM

லஜ்பத் நகர்:தென்கிழக்கு டில்லியில் உள்ள கண் மருத்துவமனையில் நேற்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
லஜ்பத் நகர் பகுதியில் ரிங் ரோட்டில், ஐ7 சவுத்ரி என்ற தனியார் கண் மருத்துவமனை இயங்கி வருகிறது. மொத்தம் இரண்டு தளங்களைக் கொண்ட கட்டடத்தில் இந்த மருத்துவமனை உள்ளது. தரைத்தளத்தில் நேற்று காலை 11:30 மணி அளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
தீ விபத்து பற்றி அறிந்ததும் கட்டடங்களில் இருந்தவர்கள் அலறி அடித்து வெளியே ஓடினர். தரைத்தளத்தில் இருந்து தீ, முதல் தளத்திற்கும் பரவியது. அதில் இயங்கி வந்த உணவகமும் முழுவதுமாக சேதமடைந்தது.
தகவலறிந்து அங்கு 12 தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தன. தீயின் தீவிரத்தைப் பார்த்து, கூடுதலாக எட்டு வண்டிகள் வரவழைக்கப்பட்டன. வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.
பிற்பகல் 1:10 மணி அளவில் தீ கட்டுப்படுத்தப்பட்டது. ஏ.சி.,யில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாமென தீயணைப்பு படையினர் சந்தேகிக்கின்றனர்.
இந்த தீ விபத்தில் யாருக்கும் காயமோ உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை.
பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகி நாசமாகின. தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து பலரும் எடுத்த வீடியோக்கள், சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
கடந்த மாதம் தனியார் புதிதாக பிறந்த சிசுக்கள் பராமரிப்பு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு சிசுக்கள் உயிரிழந்த சம்பவத்தின் வடு இன்னும் மறையாமல் இருக்கும் நிலையில் மற்றொரு மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள தீ விபத்து, நகரில் பதற்றத்தை உருவாக்கிஉள்ளது.