ADDED : ஜூன் 06, 2024 12:18 AM

புதுடில்லி: ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கு மனநல மருத்துவ ஆலோசனைகள் வழங்குவதற்கான சிறப்பு மையம் துவக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் சார்பில் மனநல மருத்துவ ஆலோசனைகள் வழங்குவதற்காக, 'டெலிமானஸ்' என்ற திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதற்காக, 14416 என்ற சிறப்பு எண் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த தொலைபேசி எண்ணில் அழைத்து, மனநலம் தொடர்பான பிரச்னைகளுக்கு ஆலோசனைகள் பெற முடியும்.
கடந்த 2022 அக்டோபரில் துவக்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ், 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 51 இடங்களில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன; 20 மொழிகளில் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
நாளொன்றுக்கு, 3,500 அழைப்புகள் என, இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள் இந்த தொலைபேசி இணைப்புக்கு வந்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, ராணுவத்தினர் மற்றும் அவர்களுடைய குடும்பத்தாருக்கு உதவும் வகையில், மஹாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள ராணுவ மருத்துவக் கல்லுாரியில், இது போன்ற சிறப்பு மையம் நேற்று துவக்கப்பட்டுள்ளது.
இதற்காக, மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் ராணுவ அமைச்சகத்துக்கு இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, புனேயில் துவக்கப்படுவதாக சுகாதார அமைச்சகம் நேற்று வெளி யிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.