இளைஞரை 35 நாட்களில் 6 முறை கடித்த பாம்புகள்
இளைஞரை 35 நாட்களில் 6 முறை கடித்த பாம்புகள்
இளைஞரை 35 நாட்களில் 6 முறை கடித்த பாம்புகள்
ADDED : ஜூலை 10, 2024 01:27 AM
லக்னோ, உத்தர பிரதேசத்தில், கடந்த 35 நாட்களில், 24 வயது இளைஞர் ஒருவரை, ஆறு முறை பாம்புகள் கடித்த வினோத சம்பவம் நடந்துள்ளது.
உ.பி.,யின் பதேபூர் மாவட்டத்தின் சவுரா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர், விகாஸ் துபே, 24. ஜூன் 2ம் தேதி, வீட்டின் படுக்கையறையில் இருந்த அவரை, பாம்பு கடித்தது. மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து குணமடைந்தார்.
தொடர்ந்து அடுத்த 10 நாட்களில், மூன்று முறை விகாஸ் துபேயை பாம்பு கடித்தது. அப்போதும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் குணமடைந்தார்.
பாம்பு கடியில் இருந்து தப்பிக்க, ராதா நகரில் உள்ள உறவினர் வீட்டில் விகாஸ் துபே தங்கினார். அங்கேயும் அவரை பாம்பு கடித்தது.
மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்ததை அடுத்து, சவுரா கிராமத்தில் உள்ள தன் வீட்டுக்கு விகாஸ் துபே மீண்டும் வந்தார். இதைத் தொடர்ந்து, கடந்த 6ம் தேதி, வீட்டில் இருந்த அவரை, ஆறாவது முறையாக பாம்பு கடித்தது.
மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட விகாஸ் துபே, சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து குணமடைந்தார்.
இப்படி, ஜூன் 2 முதல், ஜூலை 6 வரை மட்டும், விகாஸ் துபேயை ஆறு முறை பாம்புகள் கடித்துள்ளன.
இது குறித்து, விகாஸ் துபே கூறியதாவது:
ஒவ்வொரு முறை பாம்பு கடிக்கும் போதும் முன்னறிவிப்புப் போல ஏதோ ஒன்று தோன்றும். என்னை பாம்பு கடித்ததெல்லாம், சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகள் தான்.
எனவே, எனக்கு நடக்கும் சம்பவங்களின் பின்னணியில் ஏதோ இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.