மியான்மருக்கு ஆள் கடத்தல்: கேரள முதல்வர் புகார்
மியான்மருக்கு ஆள் கடத்தல்: கேரள முதல்வர் புகார்
மியான்மருக்கு ஆள் கடத்தல்: கேரள முதல்வர் புகார்
ADDED : ஜூலை 10, 2024 01:27 AM
திருவனந்தபுரம், சமூக ஊடகங்களில் போலி விளம்பரங்கள் கொடுத்து, கேரளாவில் இருந்து மியான்மர் மற்றும் தாய்லாந்து எல்லைக்கு ஆட்களை கடத்திய முகவர்கள் குறித்து, மியான்மரில் உள்ள இந்திய துாதரகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, மாநில முதல்வர் பினராயி விஜயன் சட்டசபையில் நேற்று தெரிவித்தார்.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
இம்மாநிலத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு, தென்கிழக்கு ஆசிய நாடுகளான மியான்மர் மற்றும் தாய்லாந்தில் வேலை வாங்கி தருவதாக சமூக ஊடகங்களில் போலி விளம்பரங்கள் வெளியிட்டு ஆட்கள் கடத்தப்பட்டதாக புகார் எழுந்தது.
இது குறித்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரமேஷ் சென்னிதலா கேரள சட்டசபையில் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது:
இந்த மோசடி குறித்து தகவல் வெளியானதும், 'நோர்கா ரூட்ஸ்' எனப்படும், வெளிநாடுவாழ் கேரள மக்களின் நலவாழ்வு அமைப்பு, அது தொடர்பான எச்சரிக்கை மற்றும் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்டு வெளிநாடு அழைத்து செல்லப்பட்ட இரு நபர்கள், அங்கு கொத்தடிமைகளைப் போல் நடத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் அங்கிருந்து தப்பி வந்து அளித்த புகாரின் அடிப்படையில், கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த இரு முகவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துஉள்ளனர்.
அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த போலி முகவர்கள் குறித்து மியான்மரில் உள்ள இந்திய துாதரகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.