ADDED : ஜூன் 18, 2024 12:41 AM
பாட்னா, பீஹாரின் பாங்கா மாவட்டத்தில் அரசு பொறியியல் கல்லுாரி இயங்கி வருகிறது. இங்குள்ள விடுதியில் ஏராளமான மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். கடந்த 13ம் தேதி இந்த விடுதியில் மாணவர்களுக்கு இரவு உணவு பரிமாறப்பட்டது.
அப்போது அதில், இறந்த பாம்பின் உடல் துண்டுகள் இருப்பதை பார்த்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையே, சில மாணவர்கள் அந்த உணவை சாப்பிட்ட நிலையில் மயங்கி விழுந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில், மாணவர்கள் சாப்பிட்ட உணவில் நச்சுத்தன்மை ஏற்பட்டதால் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவித்தனர். தற்போது, அவர்கள் அனைவரும் உடல்நலம் தேறிய நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
விடுதியில் நடந்த இந்த விவகாரத்தை, கல்லுாரி நிர்வாகம் மூடி மறைக்க முயற்சிப்பதாக கூறி, சக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அங்கு வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை சமரசம் செய்தனர். அப்போது, மாணவர்கள் தரப்பில் விடுதியில் உள்ள உணவகம், தனியார் ஒப்பந்ததாரரால் நடத்தப்படுவதாகவும், எப்போதும் தரமற்ற உணவு வழங்குவதாகவும் குற்றஞ்சாட்டினர்.
எனவே, தரமான உணவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மாணவர்கள் தரப்பில் கேட்டுக்கொண்டனர்.