சித்தராமையா ராஜினாமா கோரி பாதயாத்திரை நடத்த முடிவு
சித்தராமையா ராஜினாமா கோரி பாதயாத்திரை நடத்த முடிவு
சித்தராமையா ராஜினாமா கோரி பாதயாத்திரை நடத்த முடிவு
ADDED : ஜூலை 29, 2024 12:12 AM

பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா ராஜினாமா கோரி, பெங்களூரில் இருந்து மைசூருக்கு ஆகஸ்ட் 3ம் தேதி, அம்மாநில பா.ஜ., மற்றும் ம.ஜ.த.,வினர் பாதயாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, 'மூடா' என்ற மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் சார்பில், 14 மனைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மனைகள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, பா.ஜ., - ம.ஜ.த.,வினர் மைசூரு மற்றும் பெங்களூரில் சமீபத்தில் போராட்டம் நடத்தினர்.
அடுத்தகட்டமாக, பெங்களூரில் இருந்து முதல்வரின் சொந்த மாவட்டமான மைசூரு வரை பாதயாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து, பெங்களூரில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று பா.ஜ., - ம.ஜ.த., ஒருங்கிணைப்பு குழுவினர் முக்கிய ஆலோசனை நடத்தினர். அதன்பின், கர்நாடக பா.ஜ., தலைவர் விஜயேந்திரா கூறியதாவது:
பெங்களூரில் இருந்து ஆகஸ்ட் 3ம் தேதி பாதயாத்திரை ஆரம்பிக்கிறோம். மைசூரு செல்வதற்கு ஏழு நாட்கள் தேவை. மூத்த தலைவர்களான எடியூரப்பாவும், குமாரசாமியும், பாதயாத்திரையில் பங்கேற்கின்றனர்.
மைசூரில் ஆகஸ்ட் 10ம் தேதி பிரமாண்டமான நிறைவு பொதுக்கூட்டம் நடக்கும். அன்றைய தினம் இரு கட்சிகளின் தேசிய தலைவர்களான தேவகவுடாவும், நட்டாவும் பங்கேற்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.