Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ பயங்கரவாதிகள் ஊடுருவல் முறியடித்த பாதுகாப்பு படை

பயங்கரவாதிகள் ஊடுருவல் முறியடித்த பாதுகாப்பு படை

பயங்கரவாதிகள் ஊடுருவல் முறியடித்த பாதுகாப்பு படை

பயங்கரவாதிகள் ஊடுருவல் முறியடித்த பாதுகாப்பு படை

ADDED : ஜூலை 27, 2024 11:43 PM


Google News
ஸ்ரீநகர்: பாகிஸ்தானில், பாக்., எல்லை நடவடிக்கைக் குழு என்ற அதிகாரப்பூர்வமற்ற படைப்பிரிவு செயல்படுகிறது. இந்திய எல்லைக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவ வைக்க உதவுவது தான், இந்த குழுவின் முக்கிய பணி.

இதற்காக இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் மீது, இவர்கள் தாக்குதல் நடத்துவர். இந்த படைப்பிரிவில் லஷ்கர் இ - தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்பினர், பாக்., ராணுவத்தினர் இடம் பெற்றுள்ளனர்.

இவர்களுக்கு பாகிஸ்தான் ராணுவம் பயிற்சி அளித்து வருகிறது. இந்நிலையில், ஜம்மு - காஷ்மீரின் குப்வாரா மாவட்டம், காமகாரி செக்டார் பகுதியில், பாகிஸ்தான் எல்லை நடவடிக்கைக் குழுவினர் ஊடுருவ உள்ளதாக நம் ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நம் எல்லை பாதுகாப்பு படையினர் அந்த பகுதியில் ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது இந்திய நிலைகளை குறிவைத்து ஊடுருவல்காரர்கள் கையெறி குண்டுகளை எறிந்தனர்.

பதிலுக்கு நம் படையினரும் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். தொடர்ந்து நடந்த கடுமையான சண்டையில் பாகிஸ்தான் தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டார். இரண்டு பேர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் தப்பி ஓடினர். ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது.

நம் ராணுவம் தரப்பில் படை தளபதி உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதில் வீரர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us