நிலவில் பாறை துகள்கள் 'ரோவர்' கண்டறிந்து தகவல்
நிலவில் பாறை துகள்கள் 'ரோவர்' கண்டறிந்து தகவல்
நிலவில் பாறை துகள்கள் 'ரோவர்' கண்டறிந்து தகவல்
ADDED : ஜூலை 03, 2024 01:01 AM
புதுடில்லி, நிலவில் தரையிறங்கிய, 'பிரஜ்ஞான் ரோவர்' நிலவின் தென் துருவ பரப்பில் ஏராளமான பாறை துண்டுகளை கண்டறிந்த தகவல் தெரியவந்துஉள்ளது.
நிலவின் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக, கடந்த ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் - 3 விண்கலத்தில் இருந்து பிரிந்த, 'விக்ரம் லேண்டர்' கருவி, கடந்த ஆண்டு ஆக., 23ல் நிலவில் தரையிறங்கியது. அதன் உள்ளிருந்து, 27 கிலோ எடையுடைய பிரஜ்ஞான் ரோவர் கருவி, நிலவின் தென் துருவத்தில் இறங்கி ஆய்வு மேற்கொண்டது. இந்த ரோவர் கருவி, நிலவின் தென் துருவத்தில் 338 அடி பயணித்து காட்சிகளை படம்பிடித்து பூமிக்கு அனுப்பியது.
லேண்டர் தரையிறங்கிய பகுதிக்கு, 'சிவசக்தி' என, பெயரிடப்பட்டுள்ளது. இந்த இடத்தில் இருந்து மேற்கு திசை நோக்கி ரோவர் கருவி, 128 அடி துாரம் நகர்கையில், 'ரிகோலித்' என்றழைக்கப்படும், நிலவின் மேல்பரப்பில் உள்ள துகள்கள் விலகி, ஏராளமான பாறை துண்டுகள் இருப்பதை ரோவர் கருவி படம்பிடித்துள்ளது.
குஜராத் மாநிலம், ஆமதாபாதில் கோள்கள் குறித்து இந்த ஆண்டு துவக்கத்தில் நடந்த சர்வதேச மாநாட்டில் இந்த தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டன. நிலவில் பாறைகள் இருப்பது தொடர்பாக ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு அறிக்கைகளை, ரோவர் கருவி அளித்த தகவல் உறுதி செய்துள்ளது.