25 ஆண்டாக திறக்கப்படாத ராஜிவ் சிலை; கோஷ்டி தகராறில் சிதிலமடையும் பரிதாபம்
25 ஆண்டாக திறக்கப்படாத ராஜிவ் சிலை; கோஷ்டி தகராறில் சிதிலமடையும் பரிதாபம்
25 ஆண்டாக திறக்கப்படாத ராஜிவ் சிலை; கோஷ்டி தகராறில் சிதிலமடையும் பரிதாபம்
ADDED : ஜூலை 02, 2024 09:34 PM

தங்கவயல், ஆண்டர்சன் பேட்டை பஸ்நிலைய மையப் பகுதியில், முன்னாள் பிரதமர் ராஜிவ் சிலையை25 ஆண்டுகளுக்கு முன் காங்கிரசார்நிறுவினர். தற்போதைய முதல்வரின் அரசியல் செயலர் நசீர் அகமது ஆதரவாளர்கள் தான் இச்சிலையை நிறுவினர்.
அப்போது, கோலார் லோக்சபா தொகுதி எம்.பி., யாக இருந்தவர், தற்போதைய மாநிலஉணவுத் துறை அமைச்சர் முனியப்பா. நசீர் அகமது -- முனியப்பா கோஷ்டி தகராறில் ராஜிவ் சிலையை திறக்காமல் விட்டு விட்டனர்.
திறப்பு விழா நடத்த சிலை குழுவைச் சேர்ந்தவர்கள் இரண்டு, மூன்று முறை முயற்சிகள் மேற்கொண்டனர்.
ஆயினும், தலை இல்லாமல் வால் ஆட முடியாத நெருக்கடி ஏற்பட்டது. 10 ஆண்டுகளுக்கு முன் ராகுல் கூட தங்கவயலுக்கு வந்திருந்தார். அவராவது அந்த சிலையை திறந்து வைப்பார் என தொண்டர்கள் எதிர்பார்த்தனர். அப்போதும், அப்படியொரு சிலை ஆண்டர்சன் பேட்டையில் திறக்கப்படாமல் இருப்பது அவரின் கவனத்துக்கு செல்லவே இல்லை.
தொடர்ந்து, 28 ஆண்டுகள் எம்.பி.,யாக இருந்த முனியப்பா, அக்கறை செலுத்தி இருந்தால், ராஜிவ் சிலையை திறந்து இருக்கலாம் என்பதே பலரது கருத்தாக உள்ளது. காங்கிரசாரின் அலட்சியப் போக்கால், சிலை திறக்கப்படாமல்துணியால் தற்போதும் மூடியே கிடக்கிறது.
தங்கவயலின் மண்ணின் மைந்தரான நசீர் அகமதுக்கென, தனிகோஷ்டி இப்போதும் இருக்கிறது. இவரின் கோஷ்டியினர் தான் அந்த சிலையை வைத்தவர்கள் என்பது அவருக்கும் தெரியும். முதல்வரின் செயலராக இருந்தும் கூட அவருக்கும் ராஜிவ் சிலையை திறக்க மனம் வரவில்லை.
தங்கவயலில் ஒருமுறைக்கு இருமுறை எம்.எல்.ஏ.,வாக இருந்து வருபவர் அமைச்சர் முனியப்பாவின் மகள் ரூபகலா. அவரும் ஆண்டர்சன் பேட்டை பகுதியில் தேர்தல்நேரத்தில் ஓட்டு கேட்க மட்டுமல்ல, சாலை, கால்வாய் பணிகள் மேற்கொள்ளவும் பல முறை வந்து சென்றவர் தான். ஆனால், அவரும் கூட ராஜிவ் சிலையை திறக்க ஆர்வம் காட்டியதாக தெரியவில்லை.
பல ஆண்டுகளுக்குமுன் நிறுவப்பட்ட ராஜிவ் சிமென்ட் சிலையின் பீடமும் சிதிலமடைந்துள்ளது. சிலையைமூடி வைத்துள்ள துணி வெயில், பலத்த காற்று, மழையால்,கிழிந்து கந்தலாவது வழக்கம். இதை மட்டும் அவ்வப்போது மாற்றி வருகின்றனர்.
கர்நாடக மாநில அரசு காங்கிரஸ் வசம். ராபர்ட்சன் பேட்டை நகராட்சியும் காங்கிரஸ் வசம் தான். ஆனாலும், கோஷ்டி அரசியல் காரணமாக ராஜிவ் சிலை திறக்கப்படாமல் இருப்பது, அக்கட்சி தொண்டர்கள் மனதில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
-- நமது நிருபர் -