ADDED : ஜூன் 19, 2024 02:47 AM
புதுடில்லி, வரும் 24 முதல் ஜூலை 3 வரை, 18வது லோக்சபாவின் முதல் கூட்டத்தொடர் நடக்கவுள்ளது. 26ல் சபாநாயகர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், 27ல், பார்லி., கூட்டுக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்ற உள்ளார்.
பின், 28ல், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இரு அவைகளிலும் நடக்கும். தொடர்ந்து இதற்கு பிரதமர் மோடி பதில் அளிப்பார்.
இந்நிலையில், லோக்சபா முதல் கூட்டத்தொடர் குறித்து, பா.ஜ., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங், டில்லியில் உள்ள தன் வீட்டில், மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், தர்மேந்திர பிரதான், கிரண் ரிஜிஜு உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.
இதில், தே.ஜ., கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ராஜிவ் ரஞ்சன் சிங், லோக் ஜனசக்தி ராம் விலாஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானும் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், ஜனாதிபதி உரையில் சேர்க்க வேண்டிய முக்கிய அம்சங்கள், லோக்சபா சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவிக்கான வேட்பாளர்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சபாநாயகர் பதவிக்கு பா.ஜ., வேட்பாளரை ஆதரிப்பதாக, ஐக்கிய ஜனதா தளம் தெரிவித்துள்ள நிலையில், மற்றொரு கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம், ஒருமித்த கருத்துடைய வேட்பாளரை நிறுத்தும்படி கூறியுள்ளது.