'கால்கேர்ள்' இணையத்தில் இளம்பெண் எண் பதிவிட்ட பி.ஜி., உரிமையாளர் கைது
'கால்கேர்ள்' இணையத்தில் இளம்பெண் எண் பதிவிட்ட பி.ஜி., உரிமையாளர் கைது
'கால்கேர்ள்' இணையத்தில் இளம்பெண் எண் பதிவிட்ட பி.ஜி., உரிமையாளர் கைது
ADDED : ஜூலை 10, 2024 04:17 AM
பெங்களூரு, : பெங்களூரில் பி.ஜி.,யில் நடக்கும் குளறுபடிகளை விமர்சித்த இளம்பெண்ணின் மொபைல் எண்ணை, 'கால்கேர்ள்' இணையத்தில் பதிவிட்ட பி.ஜி., உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையின் தலைமையகமான பெங்களூரில், பல மொழி பேசும் மக்கள் வசித்து வருகின்றனர். பணிக்காக பல மாநிலங்களில் இருந்து வருவோர், இங்கு 'பேயிங் கெஸ்ட் எனும் பி.ஜி.,க்களில் தங்குகின்றனர். இவர்களுக்காக, நகரில் ஆண்கள், பெண்களுக்கென பி.ஜி.,க்கள் தனித்தனியாக செயல்படுகின்றன.
இந்நிலையில், 25 வயதுள்ள இளம்பெண், பிரேசர் டவுனில் உள்ள பி.ஜி.,யில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
சில நாட்களாக, பலர் மொபைல் போனில் இவரை தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியும், பாலியல் தொழில் குறித்தும் கேட்டனர்.
அதிர்ச்சி அடைந்த அவர், போன் செய்தவர்கள் கூறிய 'கால் கேர்ள்' இணையதளத்தை பார்த்தபோது, இவரின் மொபைல் போன் எண் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப் பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இது தொடர்பாக, பெங்களூரு கிழக்கு பிரிவு 'சைபர் கிரைம்' போலீசில் புகார் செய்தார். விசாரணை நடத்திய போலீசார், இளம்பெண்ணின் மொபைல் போன் எண்ணை பதிவேற்றியவரை கண்டுபிடித்தனர். ராஜாஜி நகரைச் சேர்ந்த ஆனந்த் சர்மா, 30, என்பவரை, 7ம் தேதி கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது வெளியான தகவல்கள்:
'ஆனந்த் சர்மா, 'வி ஸ்டேஸ்' என்ற சேஷாத்திரிபுரத்தில் பி.ஜி., நடத்தி வருகிறார்.
புகார் அளித்த இளம்பெண், இந்த பி.ஜி., குறித்து கேள்விப்பட்டார்.
அதன் உரிமையாளர் ஆனந்த் சர்மாவிடம் மொபைல் போனில் பேசினார். தங்குவதற்காக ஆன்லைனில் முன்பணமும் கொடுத்துள்ளார்.
மறுநாள் பி.ஜி.,க்கு நேரில் சென்று பார்த்தார். அவருக்கு பிடிக்கவில்லை.
எனவே தான் கொடுத்த முன்பணத்தை கொடுக்குமாறு, உரிமையாளரிடம் கேட்டார். அவர் கொடுக்க மறுத்துவிட்டார். அந்த இளம்பெண், 'கூகுள்' தளத்தில், 'வி ஸ்டேஸ்' பி.ஜி., குறித்து விமர்சித்திருந்தார்.
கோபமடைந்த ஆனந்த் சர்மா, 'கால் கேர்ள்' இணையதளத்தில், இளம்பெண்ணின் மொபைல் எண்ணை பதிவேற்றம் செய்துள்ளார்.
இவரிடம் இருந்து மொபைல் போனை பறிமுதல் செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.