ADDED : ஜூலை 17, 2024 11:24 PM

'கர்நாடகாவில் வாரம் ஒரு ஊழல் நடக்கிறது. மாநில காங்கிரஸ், மேலிடத்துக்கு ஏ.டி.எம்.,மாக மாறியுள்ளது,'' என மத்திய இணை அமைச்சர் ஷோபா குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக, டில்லியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கர்நாடகா ஐ.டி., - பி.டி., என உலக அளவில் பிரசித்தி பெற்றுள்ள மாநிலமாகும். சட்டசபை, முதல்வரின் நிகழ்ச்சிகளிலேயே பாகிஸ்தான் ஜிந்தாபாத் என, கோஷமிட்டனர்.
மாநில வளர்ச்சி குறித்து முதல்வர் சித்தராமையா ஆலோசிப்பது இல்லை. ஊழலில் மூழ்கியுள்ளார். கர்நாடக காங்கிரஸ், மேலிடத்துக்கு ஏ.டி.எம்.,மாக மாறியுள்ளது.
கர்நாடகாவில் வாரம் ஒரு ஊழல் நடக்கிறது. முதல்வர் சித்தராமையா, சட்டவிரோதமாக தன் மனைவி பார்வதி பெயரில், 14 வீட்டுமனைகள் பெற்றுள்ளார். இதற்கு பொறுப்பேற்று முதல்வர், தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
'மூடா' முறைகேட்டை மூடி மறைக்க, முயற்சி நடக்கிறது. கட்சி பாகுபாடின்றி விசாரணை நடக்க வேண்டுமானால், முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும். சித்தராமையா மீதும் எப்.ஐ.ஆர்., பதிவு செய்திருக்க வேண்டும்.
வால்மீகி மேம்பாட்டு ஆணைய பணம், சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்ட முறைகேட்டில், நாகேந்திராவுக்கு மட்டுமின்றி, முதல்வருக்கும் தொடர்புள்ளது.
இவரது உத்தரவு இல்லாமல் பண பரிமாற்றம் நடந்திருக்க முடியாது. எனவே, இதற்கு பொறுப்பேற்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
சி.பி.ஐ., அதிகாரிகளின் விசாரணைக்கு, எஸ்.ஐ.டி., ஒத்துழைப்பு அளிக்கவில்லை.
இவ்வாறு அவர்கூறினார்
- நமது நிருபர் .