கோவில் நன்கொடை தமிழக அரசுக்கு நோட்டீஸ்
கோவில் நன்கொடை தமிழக அரசுக்கு நோட்டீஸ்
கோவில் நன்கொடை தமிழக அரசுக்கு நோட்டீஸ்
ADDED : ஜூலை 09, 2024 02:21 AM
புதுடில்லி : தமிழக கோவில்களில் பெறப்படும் நன்கொடைகள், உண்டியல் வருவாய் போன்றவை முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க, ஏதேனும் திட்டங்கள் உள்ளதா என்பது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு வழங்கப்படும் நன்கொடை, உண்டியல் வருவாய் போன்றவற்றில் முறைகேடுகள் நடக்கிறது எனவும், கோவில் நிதியை அறநிலையத்துறைக்கு மாற்றியதை திரும்ப வழங்க வேண்டும் எனக்கூறியும், 'ஆலயம் காப்போம்' என்ற அமைப்பு, உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தது.
இந்த மனு, நேற்று உச்ச நீதிமன்றத்தில், நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், 'தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான கோவில்களுக்கு வரும் நன்கொடை நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது' என கேள்வி எழுப்பினர்.
மேலும், 'கோவில் நன்கொடை நிதியை கல்வி போன்ற சமூக நல திட்டங்களுக்கு பயன்படுத்தினால் பிரச்னை இல்லை. ஆனால், தேவையற்ற ஆடம்பர நிகழ்வுகளுக்காக கோவில் நிதியை அரசு பயன்படுத்தினால் தவறு.
'உண்டியல் காணிக்கை, நன்கொடை நிதி முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க, அரசிடம் ஏதேனும் திட்டம் உள்ளதா என, தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்' என, உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை செப்டம்பர் 13ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.