'நீட்' தேர்வு: சி.பி.ஐ., விசாரிக்க கோரிக்கை மத்திய அரசு, என்.டி.ஏ., பதிலளிக்க உத்தரவு
'நீட்' தேர்வு: சி.பி.ஐ., விசாரிக்க கோரிக்கை மத்திய அரசு, என்.டி.ஏ., பதிலளிக்க உத்தரவு
'நீட்' தேர்வு: சி.பி.ஐ., விசாரிக்க கோரிக்கை மத்திய அரசு, என்.டி.ஏ., பதிலளிக்க உத்தரவு
ADDED : ஜூன் 15, 2024 01:07 AM
புதுடில்லி, 'நீட்' தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை கோரிய மனு மீது மத்திய அரசு, என்.டி.ஏ., பதில் அளிக்கும்படி உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு, மே 5ம் தேதி நாடு முழுதும் நடந்தது. இதில், 24 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள், ஜூன் 4ம் தேதி வெளியாகின.
இந்நிலையில், இந்த நீட் தேர்வில், கேள்வித்தாள் கசிந்ததாக முதலில் குற்றஞ்சாட்டப்பட்டது.
இதுவரை இல்லாத அளவாக, 67 மாணவர்கள், 720க்கு 720 மதிப்பெண் பெற்றனர். அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் உயர் மதிப்பெண் பெற்றனர்.
குறிப்பிட்ட, ஆறு தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, முழு கேள்வித்தாளையும் எழுத முடியாததால், கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது.
இதுவே, அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள், முழு மதிப்பெண் பெறுவதற்கு காரணமானதாகவும், பல மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் சேருவதற்கு வாய்ப்பு பறிபோவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்தப் பிரச்னை தற்போது உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. இதில், அரசியல் கட்சிகளும் மத்திய அரசுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில், நீட் முறைகேடு குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடும்படி டில்லியில் மாணவர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு மீது பதிலளிக்கும்படி, மத்திய அரசு, என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை மற்றும் சி.பி.ஐ.,க்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதுபோல, நாட்டின் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள, நீட் தேர்வு தொடர்பான மனுக்களை, உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி, என்.டி.ஏ., சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பதிலளிக்கும்படி, வழக்குகள் தொடர்ந்துள்ளோருக்கு, உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது. மற்ற வழக்குகளுடன் இணைத்து, ஜூலை 8ம் தேதி இந்த மனுக்களும் விசாரிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்போம்!
'நீட்' தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களின் நலனையும் மத்திய அரசு பாதுகாக்கும். மிகவும் நேர்மையாகவும், யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு தீர்வு காணப்படும். எந்த ஒரு குழந்தையின் எதிர்காலமும் பாதிக்க மத்திய அரசு அனுமதிக்காது.
தர்மேந்திர பிரதான்
மத்திய கல்வி அமைச்சர், பா.ஜ.,