மைசூரு தசரா: விரைவில் உயர்மட்ட கூட்டம்
மைசூரு தசரா: விரைவில் உயர்மட்ட கூட்டம்
மைசூரு தசரா: விரைவில் உயர்மட்ட கூட்டம்
ADDED : ஜூலை 27, 2024 05:45 AM

மைசூரு, : ''மைசூரு தசரா திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து, இன்னும் சில நாட்களில் முதல்வர் சித்தராமையா தலைமையில், உயர்மட்ட கூட்டம் நடக்கவுள்ளது,'' என மைசூரு மாவட்ட கலெக்டர் லட்சுமிகாந்த் ரெட்டி தெரிவித்தார்.
மைசூரு தசரா திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து, அதிகாரிகளுடன் மாவட்ட கலெக்டர் லட்சுமிகாந்த் ரெட்டி, தன் அலுவலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார்.
பின் அவர் அளித்த பேட்டி:
அக்டோபர் 3 முதல் 12 வரை மைசூரு தசரா நடக்கவுள்ளது. கடந்த முறை தசரா நிகழ்ச்சிகளில், ஏதாவது தவறு நடந்திருந்தால், அதை சரி செய்து கொண்டு இம்முறை சிறப்பாக நடத்த திட்டம் வகுத்துள்ளோம்.
தசரா திருவிழா துவக்கம், கஜ பயணம், யானைகள் பராமரிப்பு, மின் அலங்காரம், விஜயதசமி ஜம்பு சவாரி என அனைத்து நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.
நவராத்திரி உற்சவ நிகழ்ச்சிகளின் பட்டியல், தசராவை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் பணிகள், போக்குவரத்து, பிரசாரம், அரண்மனை நிகழ்ச்சிகள் என, அனைத்து விஷயங்களும், உயர்மட்ட கமிட்டி கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும். இதற்காக தயாராகும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
இம்முறை ஆடம்பரமாக தசரா கொண்டாடப்படும் வாய்ப்புள்ளது. யுவ தசரா, உணவு மேளா, விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், மின் விளக்குகள் அலங்காரத்துக்கு, இப்போதிருந்தே தயாராகிறோம்.
தசரா திருவிழா ஏற்பாடுகள் குறித்து, முதல்வர் சித்தராமையா தலைமையில், உயர்மட்ட கூட்டம் நடக்கவுள்ளது. இதில் தசரா தேதி, கஜ பயணம் குறித்து அறிவிக்கப்படலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.