Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ மனநல காப்பகத்தில் 14 பேர் மரணம் விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு

மனநல காப்பகத்தில் 14 பேர் மரணம் விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு

மனநல காப்பகத்தில் 14 பேர் மரணம் விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு

மனநல காப்பகத்தில் 14 பேர் மரணம் விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு

ADDED : ஆக 02, 2024 10:29 PM


Google News
புதுடில்லி:மனநலக் காப்பகத்தில் 14 பேர் மரணம் குறித்து விசாரணை நடத்தி 2 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட கலெக்டருக்கு, அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

வடமேற்கு டில்லி ரோஹிணி 'ஆஷா கிரண் மனநலக் காப்பகம் அமைந்துள்ளது. டில்லி அரசு நடத்தும் இந்தக் காப்பகத்தில் கடந்த 20 நாட்களில் 14 பேர் மரணம் அடைந்துள்ளனர். உடல் நலக்குறைவு மற்றும் ஊட்டச் சத்துக் குறைபாட்டால் மரணம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து, அமைச்சர் அதிஷி கூறியதாவது:

அரசு மனநலக் காப்பகத்தில் ஏற்பட்ட இந்த மரணங்கள் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இதுபோன்ற தவறுகளை அரசு பொறுத்துக் கொள்ளாது. இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை நடத்தி காப்பகத்தின் குறைபாடுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆஷா கிரண் காப்பகத்தில் முழு விசாரணை நடத்தி இரண்டு நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காப்பகத்தில் தங்கியிருப்போருக்கு சிறப்பான வசதிகளை செய்து தரவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தக் காப்பகம் டில்லி அரசின் சமூக நலத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது. அந்தத் துறையின் அமைச்சராக இருந்த ராஜ்குமார் ஆனந்த் 2 மாதங்களுக்கு முன் ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து சமூகநலத் துறைக்கு அமைச்சரும் நியமிக்கப்படவில்லை. வேறு அமைச்சரிடமும் அந்தத் துறைப் பொறுப்பை ஒப்படைக்கவில்லை.

அலட்சியம்

பா.ஜ., மகளிர் அணி தேசிய துணைத் தலைவர் ரேகா குப்தா, “நிர்வாகத்தினரின் அலட்சியம் மற்றும் முறைகேடுகள் காரணமாகத்தான் 14 பேர் மரணம் அடைந்துள்ளனர். அங்கு ஆய்வு நடத்தச் சென்றோம். ஆனால், கதவைத் திறக்க மறுத்து விட்டனர். இந்த மரணங்களுக்கு பொறுப்பேற்று அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்,”என்றார்.



மரணப் பொறி

தேசிய பெண்கள் கமிஷன் தலைவர் ரேகா ஷர்மா கூறியதாவது:ஆஷா கிரண் காப்பகத்தில் ஆய்வு செய்தோம். அந்தக் காப்பகத்தில் 250 பேர்தான் தங்க முடியும். ஆனால், 450 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வழங்கப்படும் அசுத்தமான தண்ணீர் வழங்கப்படுகிறது. இதற்கு நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி பொறுப்பேற்க வேண்டும். இந்தக் காப்பகத்தில் மரணம் பெரும்பாலான பெண்கள் 40 வயதுக்குட்பட்டவர்கள். ஊட்டச்சத்து குறைபாட்டால் மரணம் அடைந்துள்ளனர். டில்லி அரசு நடத்தும் காப்பகங்கள் அப்பாவி மக்களின் மரணப் பொறியாக மாறி விட்டன.இவ்வாறு அவர் கூறினார்.



அரசியல் வேண்டாம்

சுற்றுச் சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் கூறியதாவது:ஆஷா கிரண் காப்பகத்தில் நடந்த மரணங்கள் குறித்து பா.ஜ., போராட்டம் நடத்துகிறது. அதேநேரத்தில் வாய்க்காலில் மூழ்கி தாய் - -மகன் இறந்த சம்பவம் குறித்து பா.ஜ., தலைவர்கள் வாய் திறக்கவில்லை. ஏனென்றால், அது டில்லி மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வாய்க்கால். அதைக் கண்டித்தால் ஆணையத்தின் தலைவரான துணைநிலை கவர்னர் சக்சேனா மாட்டிக் கொள்வார். டில்லியில் நடக்கும் சம்பவங்களில் அரசியல் செய்வதை பா.ஜ., நிறுத்த வேண்டும். ஆஷா கிரண் சம்பவத்தில் குற்றவாளி யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us