கே.யு.டி.ஏ., தலைவர் பதவியேற்பு எம்.எல்.ஏ., ரூபகலா 'ஆப்சென்ட்'
கே.யு.டி.ஏ., தலைவர் பதவியேற்பு எம்.எல்.ஏ., ரூபகலா 'ஆப்சென்ட்'
கே.யு.டி.ஏ., தலைவர் பதவியேற்பு எம்.எல்.ஏ., ரூபகலா 'ஆப்சென்ட்'
ADDED : ஜூலை 27, 2024 05:26 AM

தங்கவயல் : கே.யு.டி.ஏ., தலைவராக பங்கார்பேட்டையின் கோபால் ரெட்டி பதவியேற்பு விழாவில், தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா, அவரது ஆதரவாளர்கள் உட்பட தங்கவயல் காங்கிரசார் யாரும் பங்கேற்கவில்லை.
தங்கவயல், பங்கார்பேட்டை ஆகிய இரு சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்டது கே.யு.டி.ஏ., எனும் கே.ஜி.எப்., அர்பன் டெவலப்மென்ட் அத்தாரிட்டி. இதை தங்கவயல் வளர்ச்சி குழுமம் என்றும் அழைப்பர். இதன் அலுவலகம், ராபர்ட்சன்பேட்டை 6வது கிராஸ் சாலையில் உள்ளது.
இதன் தலைவர் பதவிக்கு, இரு தொகுதிகளில் இருந்தும் காங்கிரஸ் பிரமுகர்கள் முயற்சி மேற்கொண்டனர்.
ஆனால், பங்கார்பேட்டை தொகுதியை சேர்ந்த கோபால் ரெட்டிக்கு யோகம் அடித்தது. இதனால் தங்கவயல் காங்கிரசார் ஏமாற்றம் அடைந்தனர்.
இதற்கிடையில், ராபர்ட்சன்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் நகர வளர்ச்சி குழுமத் தலைவராக கோபால்ரெட்டி பதவியேற்பதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.
வாழ்த்து
நேற்று ராபர்ட்சன்பேட்டையில் உள்ள காந்தி, அம்பேத்கர் சிலைகளுக்கு பங்கார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ., நாராயணரெட்டி மாலை அணிவித்தார். இந்நிகழ்ச்சியில், கோபால்ரெட்டி பங்கேற்றார். பின், நாதஸ்வரம் மேளம் முழங்க, அவர் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.
கே.யு.டி.ஏ., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், அதன் ஆணையர் தர்மேந்திரா, கோபால்ரெட்டிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து பலரும் வாழ்த்துகள் தெரிவித்தனர்.
பங்கேற்காதோர்
இந்நிகழ்ச்சிகயில், தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா, தங்கவயல் தொகுதியின் இரண்டு பிளாக் காங்கிரஸ் தலைவர்கள், நகராட்சியின் 14 காங்கிரஸ் கவுன்சிலர்கள், 15 கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள், கட்சியின் பல்வேறு பிரிவினரும் பங்கேற்கவில்லை.
இவ்விஷயம், தங்கவயலில் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. தங்கவயல் காங்கிரசார், தங்களின் அதிருப்தியை இதன் மூலம் வெளிப்படுத்தியதாக தெரிகிறது. கோலார் மாவட்டத்தில் காங்கிரசார் மத்தியில் ஒற்றுமை இல்லை என்பதை வெளிப்படையாக காண்பித்து உள்ளனர்.
தங்கவயல் காங்கிரசார் அனைவருமே, எம்.எல்.ஏ., ரூபகலா கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளனர்.