Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/கேரள நிலச்சரிவு: ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

கேரள நிலச்சரிவு: ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

கேரள நிலச்சரிவு: ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

கேரள நிலச்சரிவு: ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

UPDATED : ஜூலை 30, 2024 02:25 PMADDED : ஜூலை 30, 2024 10:25 AM


Google News
Latest Tamil News
திருவனந்தபுரம்: கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவரும் காங்., எம்.பி.,யுமான ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு


ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 'கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், மீட்புப் பணிகள் வெற்றியடையவும் பிரார்த்திக்கிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி


பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், 'வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு குறித்து அறிந்து மிக கவலையுற்றேன். அன்பான ஒவ்வொருவரையும் இழந்து தவிக்கும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுகிறேன். கேரளாவுக்கு வேண்டிய உதவிகளை மத்திய அரசு செய்யும். மாநில முதல்வருடன் போனில் தொடர்பு கொண்டு விவரங்கள் கேட்டறிந்தேன்' எனத் தெரிவித்துள்ளார்.

காங்., எம்.பி., ராகுல்


நிலச்சரிவில் சிக்கி தவிக்கும் மக்கள் நிலை குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் கேட்டு அறிந்தேன். உயிரிழப்பு பெரும் கவலையை தருகிறது. தேவையான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசை கேட்டு கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளனர்.

பிரதமர் நிதியில் நிவாரணம்

நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும், காயமுற்றவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் அமித்ஷா



வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு வருத்தமளிக்கிறது. தேசிய பேரிடர் மீட்பு படையினர் போர்க்கால அடிப்படையில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. மீட்பு பணியை தீவிரப்படுத்த இரண்டாவது குழு ஏற்கனவே புறப்பட்டு சென்றுள்ளது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா


நிலச்சரிவு மிகுந்த வருத்தமளிக்கிறது. அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

தமிழக முதல்வர் ஸ்டாலின்


வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் அதன் விளைவாக விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோனது பற்றி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். அப்பகுதியில் இன்னும் பலர் சிக்கியிருப்பதாக கூறுகின்றனர். மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று அனைவரையும் காப்பாற்றுவார்கள் என நம்புகிறேன். இந்த நெருக்கடியான நேரத்தில் தேவைப்படும் அனைத்துவித உதவிகளையும் சகோதர மாநிலமான கேரளாவிற்கு வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்


நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்ததாக வரும் செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன். உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். மேலும், 400க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக செய்திகள் வரும் நிலையில், அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டுமென கேரள அரசையும், மீட்புப் பணிகளில் கேரள மாநில அரசுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்துக்கொடுக்குமாறு மத்திய அரசையும் வலியுறுத்துகிறேன். நம் அண்டை மாநில சகோதரர்களுக்கு இந்த துயர்மிகு நேரத்தில் உறுதுணையாக இருக்குமாறு திமுக அரசை கேட்டுக்கொள்கிறேன்.

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை


வயநாட்டில் ஏற்பட்டுள்ள மண்சரிவின் காரணமாக, 20க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. மேலும் பலர் மண்சரிவுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மண்சரிவுகளில் சிக்கியிருப்பவர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் மீட்பு நடவடிக்கைகளில் உதவ தமிழக பா.ஜ., சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. வயநாடு மண்சரிவு மீட்புப் பணிகளிலும், மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளையும், அவர்களுக்கான இதர உதவிகளையும் இந்தக் குழு மேற்கொள்ளும்.

கவர்னர் ஆர்.என்.ரவி இரங்கல்

கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள மேப்பாடி அருகே மிகப்பெரிய நிலச்சரிவுகளில் விலைமதிப்பற்ற உயிர்களை இழந்தது ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது நெஞ்சார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காணாமல் போனவர்கள் பாதுகாப்பாக கிடைக்கவும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர் எல்.முருகன்

கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில், இதுவரை 41 பேர் பலியாகியுள்ளார்கள் என்கிற செய்தி வருத்தமளிக்கிறது. மேலும், பலர் மண்சரிவிற்குள் சிக்கியிருப்பதாக வரும் செய்திகளும் அச்சமூட்டுகின்றது. பேரிடரில் உயிரிழந்தோர் அனைவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவித்துக் கொள்கிறேன். காயமுற்றோர் விரைவில் மீண்டுவர இறைவனை பிராத்திக்கிறேன். ஓம் சாந்தி..!





      Our Apps Available On




      Dinamalar

      Follow us