மலர் விற்பனை, ஏற்றுமதிக்கு பெங்களூரில் சர்வதேச பூ மார்க்கெட்
மலர் விற்பனை, ஏற்றுமதிக்கு பெங்களூரில் சர்வதேச பூ மார்க்கெட்
மலர் விற்பனை, ஏற்றுமதிக்கு பெங்களூரில் சர்வதேச பூ மார்க்கெட்
ADDED : மார் 12, 2025 05:50 AM

பெங்களூரு; ''மாநிலத்தில் மலர் விற்பனை, ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில், பெங்களூரில் சர்வதேச தரத்தில் பூ மார்க்கெட் கட்டப்படும்,'' என, மேல்சபையில் விவசாய சந்தை துறை அமைச்சர் சிவானந்த பாட்டீல் தெரிவித்தார்.
சட்டசபையில், நேற்று ம.ஜ.த., - எம்.எல்.ஏ., மஞ்சேகவுடா கேள்விக்கு, பதிலளித்து அமைச்சர் சிவானந்த பாட்டீல் கூறியதாவது:
அரசு மற்றும் ஏ.பி.எம்.சி.,க்களின் நிதியை கொண்டு, சந்தையை செயல்படுத்தும் முடிவு, நிதித்துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் தாசனபுரா, மைசூரு, கோலாரில் உள்ள ஏ.பி.எம்.சி.,க்களில் பொது தனியார் கூட்டுடன், 'பயோ - சி.என்.ஜி.,' மையம் அமைக்கப்படும்.
இதற்கான விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் பெற, உள்கட்டமைப்பு மேம்பாட்டு துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன.
ராய்ச்சூரில் 100 கோடி ரூபாயில், நவீன வசதிகளுடன் கூடிய காய்ந்த மிளகாய் சந்தை கட்டடம் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டு, டெண்டர் கோரப்பட்டு உள்ளது.
மங்களூரின் நெல்லிகை சாலையில் 100 கோடி ரூபாயில் அதிநவீன விவசாய வளாகம் கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை பெறப்பட்டு உள்ளது. இது பரிசீலனையில் உள்ளது.
மாநிலத்தின் அனைத்து ஏ.பி.எம்.சி.,க்களையும் டிஜிட்டல் மயமாக்க, 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. மைசூரு, ராணிபென்னுார், கதக், பல்லாரியில் குளிர் சாதன வசதி ஏற்படுத்த, டெண்டர் கோரப்பட்டு உள்ளது.
நபார்டு பணி திட்டத்தின் கீழ், 179.13 கோடி ரூபாயில் கிராம சந்தைகள் மேம்படுத்தப்படும்.
மாநிலத்தில் 98,842 ஏக்கரில், பூக்கள் விளைவிக்கப்பட்டு உள்ளன. இதன் விற்பனை, ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில், பெங்களூரில் சர்வதேச தரத்தில் பூ மார்க்கெட் கட்டப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.