Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ அருணாச்சலில் மீண்டும் பா.ஜ., ஆட்சி ...அமோக வெற்றி!: சிக்கிமில் 2 வது முறையாக எஸ்.கே.எம்., அரசு

அருணாச்சலில் மீண்டும் பா.ஜ., ஆட்சி ...அமோக வெற்றி!: சிக்கிமில் 2 வது முறையாக எஸ்.கே.எம்., அரசு

அருணாச்சலில் மீண்டும் பா.ஜ., ஆட்சி ...அமோக வெற்றி!: சிக்கிமில் 2 வது முறையாக எஸ்.கே.எம்., அரசு

அருணாச்சலில் மீண்டும் பா.ஜ., ஆட்சி ...அமோக வெற்றி!: சிக்கிமில் 2 வது முறையாக எஸ்.கே.எம்., அரசு

UPDATED : ஜூன் 03, 2024 02:05 AMADDED : ஜூன் 02, 2024 11:59 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

இடாநகர்:லோக்சபா தேர்தலுடன் நடந்த சட்டசபை தேர்தலில், அருணாச்சல பிரதேசத்தில், பா.ஜ., மூன்றாவது முறையாக தொடர்ந்து அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. மற்றொரு வடகிழக்கு மாநிலமான சிக்கிமில், ஆளும் எஸ்.கே.எம்., எனப்படும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா, இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது.

Image 1276733


லோக்சபாவுக்கு ஏழு கட்டங்களாக நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் நாளை எண்ணப்பட உள்ளன. இதனுடன், அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஒடிசா, ஆந்திராவுக்கு சட்டசபை தேர்தலும் நடந்தது.

இதில், வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் சட்டசபையின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து, சட்ட சிக்கல்களை தவிர்க்க, அந்த மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டன.

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 60 தொகுதி களில், 46ல் வென்று, பா.ஜ., தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது.

முதல்வர் பெமா காண்டு உட்பட, 10 பா.ஜ.,வினர் போட்டியின்றி வென்றனர். இதையடுத்து, 50 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில், 36ல் பா.ஜ., வென்றது.

பிரதமர் வாழ்த்து


கடந்த, 2019 தேர்தலில், பா.ஜ., 41ல் வென்றது. இந்த முறை, அதன் எண்ணிக்கையை உயர்த்தியுள்ளது. என்.பி.பி., எனப்படும் தேசிய மக்கள் கட்சி ஐந்து இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் மூன்று இடங்களிலும், பி.பி.ஏ., எனப்படும் அருணாச்சல் மக்கள் கட்சி இரண்டு இடங்களிலும் வென்றன.

காங்கிரஸ் ஒரு இடத்திலும், மூன்று இடங்களில் சுயேச்சைகளும் வென்றன.

இந்த வெற்றி குறித்து, பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி உள்ளதாவது:
Image 1276735


அருணாச்சலுக்கு நன்றி. வளர்ச்சி அரசியலுக்கு இந்த சிறப்பான மாநிலத்தின் மக்கள். தங்களுடைய தடையில்லா தீர்ப்பை அளித்துள்ளனர்.

பா.ஜ., மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்கு நான் கடமைப்பட்டுள்ளேன். மாநிலத்தின் வளர்ச்சியில் இன்னும் வேகத்துடன் எங்கள் கட்சி பணியாற்றும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

இந்த சிறப்பான வெற்றிக்கு உழைத்த கட்சியின் அனைத்து நிர்வாகிகள், தொண்டர்களுக்கு பாராட்டுகள். மக்களுடன் எந்தளவுக்கு இணைந்துள்ளீர்கள் என்பது இந்த தேர்தல் முடிவு காட்டுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பெரும்பாலான தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெற்றபோதும், அருணாச்சல பிரதேச கல்வி அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான டபா தெடிர், தேசியவாத காங்கிரஸ் வேட்பாளரிடம், 228 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

சிக்கிம்


மற்றொரு வடகிழக்கு மாநிலமான சிக்கிமில், மொத்தமுள்ள 32 இடங்களில், 31ல் வென்று ஆளும் எஸ்.கே.எம்., எனப்படும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா அமோக வெற்றி பெற்றுள்ளது. இதன் வாயிலாக தொடர்ந்து இரண்டாவது முறை ஆட்சி அமைக்க உள்ளது.

கடந்த 2019 வரை தொடர்ந்து, 25 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த முக்கிய எதிர்க்கட்சியான, எஸ்.டி.எப்., எனப்படும் சிக்கிம் ஜனநாயக முன்னணி, ஒரு இடத்தில் மட்டுமே வென்றது.

இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட அந்தக் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான பவன் குமார் சாம்லிங், இரண்டிலும் தோல்வியடைந்தார்.

முதல்வரும், எஸ்.கே.எம்., தலைவருமான பிரேம் சிங் தமாங், தான் போட்டியிட்ட இரண்டு இடங்களிலும் வென்றார். அந்தக் கட்சிக்கு, 58.38 சதவீத ஓட்டுகள் கிடைத்தன. கடந்த தேர்தலில், எஸ்.கே.எம்., 17ல் வென்றது.

பா.ஜ., 31 இடங்களில் போட்டியிட்டது, அதற்கு, 5.18 சதவீத ஓட்டுகள் கிடைத்தன. காங்கிரஸ், 0.32 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற்றது. இது, 'நோட்டா' எனப்படும் யாருக்கும் ஆதரவில்லை என்பதற்கு கிடைத்த, 0.99 சதவீத ஓட்டுகளைவிட குறைவாகும். இங்கு, காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

சிக்கிம் ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட இந்திய கால்பந்து முன்னாள் வீரர் பாய்ச்சுங் பூட்டியா, பர்புங் தொகுதியில், சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார்.

சிக்கிமில் வென்ற எஸ்.கே.எம்., கட்சிக்கும், முதல்வர் தமாங்குக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளப் பதிவில், 'சட்டசபை தேர்தலில் வென்ற, எஸ்.கே.எம்., மற்றும் முதல்வருக்கு வாழ்த்துகள். மாநிலத்தின் வளர்ச்சியில் உங்களுடன் இணைந்து செயலாற்றுவதற்காக காத்திருக்கிறேன்' என, அவர் கூறியுள்ளார்.

தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, தற்போதைய 10வது சட்டசபையை கலைத்து, சிக்கிம் கவர்னர் லக் ஷ்மண் பிரசாத் ஆச்சாரியா நேற்று உத்தரவு பிறப்பித்தார்.

அருணாச்சல பிரதேச கவர்னர் கைவல்ய திருவிக்ரம் பரநாயக்கும் இதேபோன்ற உத்தரவை பிறப்பித்துள்ளார். புதிய சட்டசபை விரைவில் அமைக்கப்படும் என, அவர்களுடைய உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

சோதனையை கடந்து சாதனை!

சிக்கிமில் பிறந்து, மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங்கில் பட்டப்படிப்பு படித்த பிரேம் சிங் தமாங், 56, கடந்த 1990ல் அரசு ஆசிரியராக பணியில் சேர்ந்தார்.மூன்றாண்டுகளில் வேலையை ராஜினாமா செய்துவிட்டு பவன் குமார் சம்லிங் உடன் இணைந்து, சிக்கிம் ஜனநாயக கட்சியை 1994ல் துவங்கினார். 20 ஆண்டுகள் அக்கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்த அவர், 15 ஆண்டுகள் அமைச்சராக இருந்தார். பின், 2013ல் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா என்ற சொந்த கட்சியை துவக்கினார்.கடந்த 2014ல் நடந்த சட்டசபை தேர்தலில் இவரது கட்சி 10 இடங்களை வென்றது. முதல்வர் பவன் குமார் சம்லிங்கை பகைத்துக் கொண்டதால், ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி 2017ல் ஓராண்டு சிறை சென்றார். சிறையில் இருந்து விடுதலை ஆனதும் கட்சியை மறுசீரமைத்தார். அதன் பின் அவரது அரசியல் வாழ்க்கை ஏற்றம் காண துவங்கியது.கடந்த 2019 சட்டசபை தேர்தலில், 17 இடங்களில், சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா வென்றது. பிரேம் சிங் தமாங் முதல்வரானார். பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து பல்வேறு வளர்ச்சி திட்டங்களை சிக்கிமில் அமல்படுத்தினார். 2024 சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, தொகுதிப் பங்கீட்டில் எழுந்த பிரச்னையால் பா.ஜ., உடனான கூட்டணி முறிந்தது. இருப்பினும், 32 தொகுதிகள் அடங்கிய சிக்கிம் சட்டசபையில், 31 தொகுதிகளில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்துள்ளது.



பாடும் அரசியல்வாதி!

அருணாச்சல பிரதேச காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, மறைந்த முன்னாள் முதல்வர் டோர்ஜி காண்டுவின் மகனான, பெமா காண்டு, 45, டில்லி ஹிந்து கல்லுாரியில் பட்டம் பெற்றார். கடந்த 2000ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியல் வாழ்க்கையை துவக்கினார். அக்கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்தவர், அவரது தந்தையின் தொகுதியான முக்தோ சட்டசபை தொகுதியில் போட்டியின்றி முதல்முறையாக வெற்றி பெற்று எம்.எல்.ஏ., ஆனார். காங்.,கை சேர்ந்த நபம் துகி ஆட்சியில் சுற்றுலா துறை அமைச்சராக பதவி வகித்தார். அருணாச்சல பிரதேசத்தில் 2016ல் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி காரணமாக, ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது. அப்போது, பா.ஜ.,வின் கூட்டணி கட்சியான அருணாச்சல் மக்கள் கட்சியில் இணைந்தார். 2016 ஜூலையில், ஜனாதிபதி ஆட்சி விலக்கிக் கொள்ளப்பட்டதும், 37 வயதில் அருணாச்சல் முதல்வர் ஆனார். மூன்றே மாதங்களில் பா.ஜ.,வில் இணைந்தார். 2019ல் பா.ஜ., சார்பில் போட்டியிட்டு மீண்டும் முதல்வர் ஆனார். அரசியலை தாண்டி, இசை மற்றும் விளையாட்டு போட்டிகளில் அதிக ஆர்வம் உள்ளவர். ஹிந்தி பாடகர்கள் கிஷோர் குமார், முகமது ரபி பாடல்களை பொது நிகழ்ச்சிகளில் பாடி அசத்துவார்.மாநில அளவில் கிரிக்கெட், கால்பந்து, தடகளம், பேட்மின்டன், வாலிபால் உட்பட பல்வேறு போட்டிகளை நடத்தியுள்ளார். தற்போது நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், மூன்றாவது முறையாக வென்று முதல்வராகி உள்ளார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us