வீணாக கிடக்கும் 'ஹைடெக்' மருத்துவமனை கர்நாடக அரசின் அலட்சியத்துக்கு கண்டனம்
வீணாக கிடக்கும் 'ஹைடெக்' மருத்துவமனை கர்நாடக அரசின் அலட்சியத்துக்கு கண்டனம்
வீணாக கிடக்கும் 'ஹைடெக்' மருத்துவமனை கர்நாடக அரசின் அலட்சியத்துக்கு கண்டனம்
ADDED : ஜூன் 04, 2024 04:07 AM

பெங்களூரு, : நடிகர் புனித் ராஜ்குமார் பெயரில், கோடிக்கணக்கான ரூபாய் செலவில் கட்டபட்ட, மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, ஓராண்டு ஆகியும் இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாததற்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ரூ.50 கோடி
பெங்களூரு, கோவிந்தராஜ நகர் சட்டசபை தொகுதியின், நாயண்டஹள்ளி வார்டுக்கு உட்பட்ட, பந்தரஹள்ளியில் மறைந்த நடிகர் புனித்குமார் பெயரில், மாநகராட்சி சார்பில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டப்பட்டது.
இதை 2023 மார்ச்சில் அன்றைய முதல்வர் பசவராஜ் பொம்மை, கோவிந்தராஜ நகர் எம்.எல்.ஏ., சோமண்ணா, அஸ்வினி புனித் ராஜ்குமார், ராகவேந்திர ராஜ்குமார் ஆகியோர் திறந்து வைத்தனர்.
திறந்து வைக்கப்பட்டு, ஓராண்டு கடந்தும் மருத்துவமனை இன்னும் மக்களின் பயன்பாட்டுக்கு வரவில்லை. சட்டசபை தேர்தல் இருந்ததால், பணிகள் முடியும் முன்பே பா.ஜ., அரசு, அவசர, அவசரமாக மருத்துவமனையை திறந்து வைத்தது. ஆட்சி மாறி, காங்கிரஸ் அரசு வந்த பின், மருத்துவமனை பணிகளை தொடர்வதில், ஆர்வம் காண்பிக்கவில்லை. ஏழு மாதங்களாக பணிகள் நின்றுள்ளன.
அரசின் அலட்சியத்தால், 50 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட மருத்துவமனை, தற்போது பாழடைந்த கட்டடமாக மாறி வருகிறது. மருத்துவமனையின் வெளிப்பகுதி சுவர்களில், விரிசல் ஏற்பட்டுள்ளது. பணிகள் முடிந்த பின், மருத்துவமனையை திறந்து வைத்திருந்தால், இத்தகைய நிலை வந்திருக்காது.
குற்றச்சாட்டு
தேர்தலில் தனக்கு சாதகமாக இருக்கும் என்பதால், அவசர, அவசரமாக மருத்துவமனையை முந்தைய பா.ஜ., அரசு திறந்தது. இப்போது மருத்துவமனையை திறந்தால் பா.ஜ.,வுக்கு பெயர் கிடைக்கும் என்பதால், பணிகளை முடிக்காமல் காங்கிரஸ் அரசு, அலட்சியம் காண்பிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இரண்டு கட்சிகளின் பனிப்போரால், அனைத்து வசதிகளும் கொண்ட, ஹைடெக் மருத்துவமனை இப்போது பயனின்றி கிடக்கிறது.
'இனியாவது பணிகளை முடித்து, ஏழைகளுக்கு சிகிச்சை கிடைக்க வழி செய்யுங்கள்' என, பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.