அரசு நிதி முறைகேடு: கெஜ்ரிவால் மீது வழக்கு
அரசு நிதி முறைகேடு: கெஜ்ரிவால் மீது வழக்கு
அரசு நிதி முறைகேடு: கெஜ்ரிவால் மீது வழக்கு
ADDED : மார் 12, 2025 02:11 AM
புதுடில்லி : டில்லியில், அரசு நிதியை தவறாக பயன்படுத்தி பெரிய விளம்பர பலகைகளை நிறுவியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது, எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவலறிக்கை பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
டில்லியில் முதல்வர் ரேகா குப்தா தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு கடந்த 10 ஆண்டுகளாக, ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்தது.
அப்போது, டில்லியின் துவாரகா பகுதியில், அரசு நிதியை தவறாக பயன்படுத்தி, ஆம் ஆத்மிக்கு விளம்பரம் ஏற்படுத்தும் நோக்கில், பெரிய அளவில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டன.
இது தொடர்பாக முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அவரது கட்சி முன்னாள் எம்.எல்.ஏ., குலாப் சிங், துவாரகா கவுன்சிலர் நிதிகா சர்மா ஆகியோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
அதாவது அரசு நலத்திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை காட்டிலும், அவற்றை விளம்பரம் செய்ய அதிகம் செலவிடப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், அரசு நிதியை தவறாக பயன்படுத்திய புகாரில், அரவிந்த் கெஜ்ரிவால், குலாப் சிங், நிதிகா சர்மா ஆகியோர் மீது, எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிடக் கோரி, டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதை நேற்று விசாரித்த நீதிமன்றம், வரும் 18க்குள் மூன்று பேர் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய உத்தரவிட்டது.