நான்கு 'டிவி' சேனல்கள் முடக்கம்: ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் புகார்
நான்கு 'டிவி' சேனல்கள் முடக்கம்: ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் புகார்
நான்கு 'டிவி' சேனல்கள் முடக்கம்: ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் புகார்
ADDED : ஜூன் 24, 2024 05:00 AM

அமராவதி : ஆந்திராவில் லோக்சபா தேர்தலுக்கு பின், நான்கு தனியார் 'டிவி' சேனல்கள் முடக்கப்பட்டு உள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், இது தொடர்பாக தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராயிடம் புகார் தெரிவித்துள்ளது.
நான்காவது முறை
ஆந்திராவில் லோக்சபா மற்றும் சட்டசபை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த மாதம் 13ல் தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 175 சட்டசபை தொகுதிகளில், தெலுங்கு தேசம் 135 இடங்களில் வெற்றி பெற்றது.
ஜனசேனா 21 இடங்களிலும், ஒய்.எஸ்.ஆர்.காங்., 11 இடங்களிலும், பா.ஜ., எட்டு இடங்களிலும் வென்றன. இதையடுத்து, ஆந்திராவின் முதல்வராக நான்காவது முறையாக சந்திரபாபு நாயுடு சமீபத்தில் பதவியேற்றார்.
இந்நிலையில், தேர்தல் முடிவுகளுக்குப் பின், ஆந்திராவின் சில பகுதிகளில் டிவி 9, என் டிவி, 10 டிவி மற்றும் சாக் ஷி டிவி ஆகியவற்றை, மாநிலத்தில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முடக்கி உள்ளதாக ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக, 'டிராய்' எனப்படும் இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம், அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி., நிரஞ்சன் ரெட்டி புகார் அளித்துள்ளார்.
அதில், அவர் கூறியுள்ளதாவது: மாநில அரசின் அழுத்தத்தின் காரணமாக நான்கு டிவி சேனல்களை, உள்ளூர் கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் சங்கம் முடக்கியுள்ளது.
விசாரணை
ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசுக்கு ஆதரவாக செய்தி கள் ஒளிபரப்பிய காரணத்தாலேயே, இந்த சேனல்களை ஆளும் அரசு முடக்கியுள்ளது. ஜனநாயக நாட்டில் இது சட்டவிரோதமானது. ஊடகங்கள் மற்றும் ஒளிபரப்பு சேவைகள் மீது தேவையற்ற அதிகாரத்தை மாநில அரசு செலுத்துகிறது.
இது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். பத்திரிகை மற்றும் ஊடகங்களின் கொள்கைகள் சுதந்திரமான முறையில் செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நான்கு டிவி சேனல்கள் முடக்கப்பட்டதை, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் உள்ளூர் கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால், அதற்கான காரணம் தெரியவில்லை என அவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், ஒய்.எஸ்.ஆர்.காங்.,கின் குற்றச்சாட்டை, தெலுங்கு தேசம் கட்சி செய்தி தொடர்பாளர் ஜோஷ்னா திருநகரி மறுத்துள்ளார்.
''சமூகத்திற்கும், மாநிலத்திற்கும் வலுவான துாணாக உள்ள பத்திரிகை மற்றும் ஊடகங்களின் சுதந்திரத்தை நாங்கள் மதிக்கிறோம். அவர்களின் ஆக்கப்பூர்வமான கருத்துகளை எப்போதும் ஏற்றுக் கொள்கிறோம்,'' என அவர் கூறியுள்ளார்.