வெடிகுண்டு மிரட்டல் விடுப்போர் ஐந்து ஆண்டுகள் பறக்க தடை
வெடிகுண்டு மிரட்டல் விடுப்போர் ஐந்து ஆண்டுகள் பறக்க தடை
வெடிகுண்டு மிரட்டல் விடுப்போர் ஐந்து ஆண்டுகள் பறக்க தடை
ADDED : ஜூன் 20, 2024 01:08 AM
புதுடில்லி, விமானங்கள், விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபர்கள் ஐந்து ஆண்டு களுக்கு விமானங்களில் பறக்க தடை விதிக்க பயணியர் விமான பாதுகாப்பு அமைப்பு முடிவு செய்துள்ளது.
சமீபகாலமாக, பல்வேறு விமானங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு மின்னஞ்சல் அல்லது தொலைபேசி அல்லது விமான கழிப்பறையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக எழுதி மர்ம நபர்கள் மிரட்டல் விடுப்பது அதிகரித்து உள்ளன.
இதேபோல் சென்னை, வாரணாசி உட்பட நாடு முழுதும் உள்ள 41 விமான நிலையங்களுக்கு நேற்று முன்தினம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து விமான நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.
இதன் காரணமாக பாதுகாப்பு பரிசோதனைகள் கடுமையாக்கப்படுவதால், பயணியர் நீண்டநேரம் காத்திருந்து பயணிக்கக்கூடிய நிலை ஏற்படுகிறது. எனவே, இத்தகைய போலி வெடிகுண்டு மிரட்டல்களை விடுக்கும் நபர்களை கண்டறியும் பட்சத்தில், அவர்களுக்கு உரிய தண்டனை பெற்று தருவதுடன், விமானங்களில் ஐந்து ஆண்டுகள் பறக்கவும் தடைவிதிக்க பயணியர் விமான பாதுகாப்பு அமைப்பு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பான பரிந்துரைகளை, விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு அளித்துள்ளதாக அந்த அமைப்பின் உயர் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, போலி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபர் தவறு செய்தது உறுதி செய்யப்படும்பட்சத்தில் அந்த நபர் விமானத்தில் பறக்க மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை மட்டுமே தடை விதிக்கப்படுவதுடன், குறிப்பிட்ட விமான நிறுவனத்தில் மட்டுமே பறக்கவும் தடை விதிக்கப்படுகிறது.
இதை மாற்றி, அனைத்து விமானங்களிலும் அவர் ஐந்தாண்டுகள் வரை பயணிக்க தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.