Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ அதிகளவு பரோட்டா சாப்பிட்ட ஐந்து பசு மாடுகள் பலி

அதிகளவு பரோட்டா சாப்பிட்ட ஐந்து பசு மாடுகள் பலி

அதிகளவு பரோட்டா சாப்பிட்ட ஐந்து பசு மாடுகள் பலி

அதிகளவு பரோட்டா சாப்பிட்ட ஐந்து பசு மாடுகள் பலி

ADDED : ஜூன் 18, 2024 01:11 AM


Google News
கொல்லம், கேரளாவில் அதிகளவு பரோட்டா மற்றும் பலாப்பழங்களை உட்கொண்ட ஐந்து பசு மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. மேலும், ஒன்பது மாடுகள் கவலைக்கிடமாக உள்ளன.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் வட்டபாராவைச் சேர்ந்தவர் ஹாஸ்புல்லா. பால் பண்ணை நடத்தி வரும் இவரிடம் 30 பசு மாடுகள், இரண்டு காளை மாடுகள், இரண்டு எருமை மாடுகள் உள்ளன. இவைகளுக்கு தினமும் பரோட்டாவை தீனியாக வழங்கி வந்தார்.

கடந்த 15ம் தேதி காலை, பண்ணையில் உள்ள பசுக்களுக்கு மற்றொரு நபர் தீனி போட்டுஉள்ளார். அப்போது அவர், பசுக்களுக்கு வழங்கப்படும் உணவு அளவை விட கூடுதலாக பரோட்டா, பலாப் பழங்கள், புளியங்கொட்டை உள்ளிட்டவை அளித்துள்ளார்.

இதன் காரணமாக, சில பசுக்களின் வயிறு திடீரென வீங்கியது. சிறிது நேரத்தில் பசு மாடுகள் ஒவ்வொன்றாக மயங்கி விழுந்தன. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பண்ணை உரிமையாளர், கால்நடை டாக்டர்களுக்கு உடனே தகவல் அளித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த டாக்டர்கள், பசு மாடுகளை பரிசோதித்தனர். இதில், ஐந்து பசு மாடுகள் இறந்தது தெரியவந்தது. தவிர, ஒன்பது மாடுகள் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

உடனே, அவற்றுக்கு உரிய மருந்துகள் செலுத்தி, டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். மற்ற மாடுகள் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இறந்த பசுக்களின் உடலை எடுத்துச் சென்று பிரேத பரிசோதனை செய்ததில், அவற்றின் இறப்புக்கு அதிகளவு பரோட்டா, பலாப்பழங்கள் உட்கொண்டதே காரணம் என்பதை டாக்டர்கள் கண்டறிந்தனர்.

அளவுக்கு அதிகமாக உணவு உட்கொண்டதால், அப்பசுக்களின் வயிற்றில் நச்சு வாயுக்கள் உருவாகி, நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டதால் அவை உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

சம்பவம் நிகழ்ந்த பண்ணைக்கு, கேரள கால்நடைத் துறை அமைச்சர் சிஞ்சு ராணி நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது பசுக்களுக்கு எவ்வாறு உணவு வழங்க வேண்டும் என்பது பற்றி விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதேபோல் பசுக்களை இழந்து வாடும் விவசாயி ஹாஸ்புல்லாவுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் அமைச்சர் சிஞ்சு ராணி உத்தரவிட்டார்.

பண்ணையில் இருந்த காளை மற்றும் எருமை மாடுகளுக்கும் பரோட்டா வழங்கப்பட்டதாகவும், ஆனால் அவறுக்கு எந்த பிரச்னை ஏற்படவில்லை என்றும் சிலர் தெரிவிக்கின்றனர். அதேநேரத்தில், பசுக்களுக்கு மட்டுமே பரோட்டா வழங்கப்பட்டதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us