மாமனார், மாமியார், மனைவி அடித்து கொன்றவர் கைது
மாமனார், மாமியார், மனைவி அடித்து கொன்றவர் கைது
மாமனார், மாமியார், மனைவி அடித்து கொன்றவர் கைது
ADDED : ஜூலை 19, 2024 05:39 AM
யாத்கிர்: மனைவி, மாமனார், மாமியாரை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற, வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
தாவணகெரேயை சேர்ந்தவர் பசவராஜப்பா, 52. இவரது மனைவி கவிதா, 45. இந்த தம்பதியின் மகள் அன்னபூர்ணா, 25. இவர், பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்தார். அங்கு வேலை செய்த யாத்கிரின் முனகல் கிராமத்தைச் சேர்ந்த நவீன், 30 என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருவரும், திருமணம் செய்தனர். 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.
திருமணத்திற்கு பின் நவீனும், அன்னபூர்ணாவும் யாத்கிரில் வசித்தனர். இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக நவீனை, அன்னபூர்ணா பிரிந்தார். கடந்த ஓராண்டாக பெற்றோர் வீட்டில் குழந்தையுடன் வசித்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன், அன்னபூர்ணாவிடம் மொபைல் போனில் பேசிய நவீன், 'இனிமேல் உன்னிடம் பிரச்சனை செய்ய மாட்டேன். நாம் இருவரும் சந்தோஷமாக வாழலாம்' என்று கூறியுள்ளார்.
இதையடுத்து நேற்று முன்தினம் காலை, பெற்றோரை அழைத்துக் கொண்டு, கணவர் வீட்டிற்கு அன்னபூர்ணா சென்றார்.
ஊர் பெரியவர்களை அழைத்து அன்னபூர்ணாவின் பெற்றோர் பேச்சு நடத்தினர். அதன்பின் அன்னபூர்ணாவை, நவீன் வீட்டில் விட்டுவிட்டு ஊருக்கு புறப்பட்டனர்.
அப்போது உங்களை பஸ் ஏற்றி விட வருகிறேன் என மாமனார், மாமியாரிடம், நவீன் கூறினார். அவர்களையும், அன்னபூர்ணாவையும் காரில் அழைத்து சென்றார்.
ஆனால், நடுவழியில் காரை நிறுத்தி, மனைவி, மாமனார், மாமியாரை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து நவீன் தப்பி சென்றார். பலத்த காயமடைந்த மூன்று பேரும் பரிதாபமாக இறந்தனர்.
நேற்று காலை நவீனை, சைதாப்பூர் போலீசார் கைது செய்தனர். கொலைக்கான காரணத்தை கூற மறுத்து விட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.