முன்னாள் அமைச்சர் ராஜ்குமார் தகுதிநீக்கம் சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல் அதிரடி
முன்னாள் அமைச்சர் ராஜ்குமார் தகுதிநீக்கம் சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல் அதிரடி
முன்னாள் அமைச்சர் ராஜ்குமார் தகுதிநீக்கம் சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல் அதிரடி
ADDED : ஜூன் 15, 2024 01:39 AM

சிவில் லைன்ஸ்:டில்லி சமூக நலத்துறை முன்னாள் அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த், சட்டசபை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசில் மதுபானக் கொள்கை விவகாரத்தில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடைபெற்றதாக எழுந்த புகார் எழுந்தது. இதுகுறித்து அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
இந்த விவகாரத்தில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த ராஜ்குமார் ஆனந்துக்கு சொந்தமான இடங்களில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமலாக்கத்துறை அதிரடியாக சோதனை நடத்தியது. இதே வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த், ஏப்ரல் 10ம் தேதி திடீரென தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
அத்துடன், ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் வெளியேறினார்.
கடந்த சட்டசபை தேர்தலில் படேல் நகர் தனித் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆனந்த், கட்சியின் பதவிகளில் தலித் தலைவர்கள் புறக்கணிக்கப்பட்டுவதாக குற்றஞ்சாட்டினார். பின்னர் அவர் பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்தார். இவரது இந்த முடிவு, டில்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து அவரை தகுதி நீக்கம் செய்யக்கோரி சபாநாயகரிடம் ஆம் ஆத்மி சார்பில் கடிதம் அளிக்கப்பட்டது. இதை பரிசீலித்த சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல், விளக்கம் கோரி ராஜ்குமாருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
பதில் அளிக்க ஜூன் 10ம் தேதி வரை அவருக்கு அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் பதில் அளிக்கவில்லை. 11ம் தேதி நேரில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து நேற்று சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல் கூறியதாவது:
ராஜ்குமாருக்கு வழங்கப்பட்ட நோட்டீசுக்கு அவர் பதிலளிக்கவில்லை. ஜூன் 11ம் தேதி நேரிலும் ஆஜராகவில்லை. அவருக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்பட்டது. இன்று (நேற்று) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அவர் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தார். ஆனால் அவர் வரவில்லை. இதையடுத்து அவர் தகுதி நீக்கம் செய்யப்படுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.